இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு.. பிரத்தியேகமாக 25% இடங்கள்! நுழைவு தேர்வு கூட இல்லையாம்!
டெல்லி: வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வி படிப்பை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
Recommended Video
அமெரிக்கா, பிரிட்டன், உக்ரைன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும். குறிப்பாக ஆஸ்திரேலியா வெளிநாட்டு மாணவர்கள் மூலம் நல்லதொரு வருவாயையே ஈட்டுகிறது.
இருப்பினும், இந்தியாவில் இதுபோல வெளிநாட்டு மாணவர்கள் மூலம் கிடைக்கும் வருவாய் பெரிதாக இல்லை. பல்கலைக்கழகங்கள் குறைந்த அளவு இடங்களே வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.
எண்ணெய்ப் பனை சாகுபடிக்கு ரூ.5.65 கோடி நிதி ஒதுக்கீடு - விவசாயிகளுக்கு தமிழக அரசு அழைப்பு!
25% தனி இடங்கள்
இந்நிலையில், நமது நாட்டில் வெளிநாட்டு மாணவர்களின் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் இளங்கலை மற்றும் முதுகலை பாடங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்காக எனத் தனியாக 25 சதவீத இடங்களை உருவாக்க அனுமதிக்கப்படும் என்று யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமார் தெரிவித்தார்.
நுழைவுத் தேர்வு இல்லை
வெளிநாட்டில் இருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு எதுவும் இருக்காது. இந்த முடிவுகள் கடந்த வாரம் நடைபெற்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும் ஜெகதேஷ் குமார் தெரிவித்தார். இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் இருந்து கூடுதலாக இந்த இடங்கள் உருவாக்கப்படும் என்றும் இதற்கான முடிவுகளைச் சம்மந்தப்பட்ட கல்வி நிர்வாகமே எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தகுதி என்ன
இது தொடர்பாக ஜெகதேஷ் குமார் மேலும் கூறுகையில், "உயர் கல்வி நிறுவனங்கள் நமது மாணவர்களுக்கு வைத்திருக்கும் தகுதிக்கு இணையான கல்வித் தகுதியை அடிப்படையாக வைத்து வெளிநாட்டு மாணவர்களைச் சேர்க்கலாம். இதனை யுஜிசி அல்லது அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் தீர்மானிக்கும். சர்வதேச மாணவர்களைச் சேர்ப்பதில் வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படும்.
பிரத்தியேக இடங்கள்
கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்கு எனத் தனியாக 25% இடங்களை ஒதுக்கலாம். எக்ஸ்சேஞ்ச் திட்டங்களில் இந்தியா வந்து படிக்கும் மாணவர்கள் இந்த பிரத்தியேக இடங்களில் பொருந்தாது. இளங்கலை, முதுகலை என இரண்டிலும் இவை வெளிநாட்டு மாணவர்களுக்கு எனப் பிரத்தியேகமாக ஒதுக்கப்படும். இந்த இடங்கள் நிரப்பப்படவில்லை என்றாலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மட்டுமே இவை ஒதுக்கப்பட வேண்டும். இதர பிரிவினருக்கு இதை ஒதுக்க முடியாது.
பாஸ்போர்ட்
வெளிநாட்டு மாணவர்கள் என்றால் அவர்களிடம் வெளிநாட்டு பாஸ்போர்ட் இருக்க வேண்டும். தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ள இந்த சிறப்பு இடங்களை அந்தந்த துறைகளின் அமைப்புகளால் நிர்வகிக்கப்படும். சர்வதேச மாணவர்களுக்குக் கிடைக்கும் இடங்கள், கட்டணம், சேர்க்கை செயல்முறை, தகுதி உள்ளிட்ட அனைத்தும் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படும்.
தேசிய கல்விக் கொள்கை
புதிய தேசிய கல்விக் கொள்கையில் உயர்கல்வியின் சர்வதேசமயமாக்கல் முக்கிய அம்சமாகும். இது நமது நாட்டின் கல்வியை மேம்படுத்த உதவும். சர்வதேச மாணவர்களை ஈர்ப்பதற்கான வாய்ப்புகள் இப்போது அதிகரித்து வருகிறது. பல இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல மதிப்பு உள்ளது. இதற்குத் தேவையான வழிகாட்டுதல்களும் விரைவில் வெளியிடப்படும். வெளிநாட்டு மாணவர்கள் மிக எளிதாக இந்தியாவில் உயர்கல்வியைப் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதே இதன் நோக்கம் ஆகும்" என்றார்,
இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்கள்
வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல்படி இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் 23,439 மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர். கொரோனாவுக்கு பிறகு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. முன்னதாக 2019இல் 75 ஆயிரம் மாணவர்கள் இந்தியாவில் படித்து வந்தனர். இந்த எண்ணிக்கையை உயர்த்தவே அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.