காவிரி: பாஜக அரசை குறை சொல்லாம ’கூட்டாளி’ திமுக அரசுடன் பேசுங்க-'சித்து’வை சீண்டிய மத்திய அமைச்சர்!
டெல்லி: காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்தியில் ஆளும் பாஜக அரசை விமர்சிக்காமல் காங்கிரஸின் கூட்டணி கட்சியான திமுக ஆளும் தமிழ்நாடு அரசுடன் கர்நாடகா அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி சாடியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகலாஷ் ஜோஷி கூறியதாவது: திமுகவும் காங்கிரஸும் கூட்டணி கட்சிகள். காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா முதல்வர்கள் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? இதில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலையிட்டு ஏன் பேசக் கூடாது?

தலையிடவே முடியாது: காவிரி நதிநீர் பிரச்சனையில் மத்திய அரசு எந்தவிதத்திலும் தலையிட முடியாது என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் நாள்தோறும் பிரதமர் மோடியையும் பாஜகவையுமே கர்நாடகா முதல்வர் சித்தராமையா விமர்சித்து கொண்டிருக்கிறார்.
திசை திருப்பும் சித்தராமையா: தமிழ்நாடும் கர்நாடகாவும் பேச்சுவார்த்தைக்கே முன்வந்தாலும் மத்திய அரசு எப்படி அழைக்க முடியும்? மக்களை திசை திருப்புவதில் சித்தராமையா எக்ஸ்பெர்ட். தன்னுடைய தவறுகளை மறைத்து மக்களை திசை திருப்புகிறார் சித்தராமையா.
பழிபோடுவதை நிறுத்துங்க: காவிரி பிரச்சனையில் சித்தராமையா அரசு தவறுகள் செய்த போதும் கூட, பாஜக எம்.பிக்கள் கர்நாடகா அரசுடன் முழுமையாக ஒத்துழைத்து வருகின்றனர். மத்திய அரசும் ஒத்துழைப்பு தர தயார். ஆகையால் மத்திய பாஜக அரசு மீது பழிபோடுவதை விட்டு விட்டு தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தையை கர்நாடகா அரசு நடத்த வேண்டும்.
குறை சொல்லாதீங்க..: வறட்சி நிவாரண நிதியை கர்நாடகா அரசு முதலில் வழங்க வேண்டும். முந்தைய முதல்வர் எடியூரப்பா அப்படித்தான் செய்தார். கர்நாடகா மாநில அரசு சாலைகளை சீரமைக்கக் கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. ஆனால் மத்திய அரசை குறை சொல்லிக் கொண்டிருக்கிறது.
நாங்க என்ன ஐமு கூட்டணியா?: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பெயரை மாற்ற வேண்டிய தேவை இல்லை. எங்கள் கூட்டணி மீது ஊழல் புகார்கள் இல்லை. நாங்கள் என்ன ஐக்கிய முற்போக்கு கூட்டணியா? பெயரை மாற்றி கொள்வதற்கு?. இவ்வாறு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஜெகதீஷ் ஷெட்டர் பதிலடி: ஆனால் இதனை நிராகரித்துள்ளார் கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்து தற்போது எம்.எல்.சியாக உள்ள ஜெகதீஷ் ஷெட்டர். இது தொடர்பாக ஜெகதீஷ் ஷெட்டர் கூறுகையில், தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதாவுடன் கர்நாடகா முதல்வராக நான் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகளை மேற்கொண்டார் என சுட்டிக்காட்டினார்.












Click it and Unblock the Notifications