பட்ஜெட் 2020: விவசாயிகள் காய்கறி-பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல 'கிஸான் ரயில்' அறிமுகம்!
டெல்லி: விவசாயிகளின் காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு செல்ல வசதியாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டிகளைக் கொண்ட கிஸான் ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
ஆத்திச்சூடியில் அவ்வையார் கூறியதைப் போல பூமி திருத்தி உண் என்ற அடிப்படையில் விவசாய துறை மேம்பாட்டுக்கு 16 அம்ச திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டில் விவசாயிகளின் வருமானம் 2022-க்குள் இரு மடங்கு அதிகரிக்கும்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட 100 மாவட்டங்களில் நீர்மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். 20 லட்சம் விவசாயிகளுக்கு சூரிய சக்தி பம்ப் செட் வழங்கப்படும்.
வறண்ட நிலங்களில் விவசாயிகளே சூரிய மின் உற்பத்தியை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். கிராமங்களில் உணவு தானிய கிடங்குகள் அமைக்கப்படும்.
ஒரு மாநிலத்துக்கு ஒரு தோட்டப் பயிர் என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். கால்நடைகளின் கோமாரி நோய்களை ஒழிக்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். வேளாண் கடன் இலக்கு ரூ15 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிருஷி உதான்
கிருஷி உதான் திட்டம் மூலம் தேசிய மற்றும் சர்வதேச விமான போக்குவரத்து மூலம் விவசாய பொருட்களை எடுத்துச் செல்ல வசதி ஏற்படுத்தப்படும்.
கிஸான் ரயில்
விவசாயிகளின் வேளாண் பொருட்களான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வதற்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட பெட்டிகள் கொண்ட கிஷான் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சேமிப்பு கிடங்குகள் உருவாக்கப்படும். தனலட்சுமியாக இருக்கும் பெண்கள் தானிய லட்சுமியாவார்கள்.