அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு தயாரான இஸ்ரோ! சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: விண்வெளி துறையில் இந்தியா மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இந்நிலையில், நிலவிலிருந்து மண் துகள்கள், சிறு கற்களை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்ய சந்திரயான் 4 திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ கூறி வந்தது. தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
நிலவில் விண்கலனை வெற்றிகரகமாக தரையிறக்கி சந்திரயான் 3 திட்டம் உலக சாதனை படைத்திருந்தது. இதனையடுத்து சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முனைப்பு காட்டி வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம், பூமியிலிருந்து நிலவுக்கு விண்கலன் அனுப்பப்பட்டு, அது வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டு, நிலவிலிருந்து மண் துகள்கள், சிறு கற்களை எடுத்துக்கொண்டு பூமிக்கு திரும்புவதே ஆகும்.

இதை இஸ்ரோ 2027ல் சாத்தியப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த மிஷனில் மொத்தம் 5 சவாலான கட்டங்கள் இருக்கின்றன. 1. நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாக தரையிறங்குதல், 2. நிலவின் மண், சிறு கற்களை சேகரித்தல், 3. சந்திரனிலிருந்து வெளியே வருவது, 4. சந்திரனின் சுற்றுப்பாதையிலிருந்து விலகி பூமியை நோக்கி திரும்புவது, 5. பூமியில் பத்திரமாக தரையிறங்குவது என 5 கட்டங்கள் இருக்கின்றன.
சந்திரயான் 4 இரண்டு கட்டங்களாக ஏவப்படும் என்றும், இதில் நான்கு தொகுதிகள் உள்ளது என்றும் இஸ்ரோ கூறியுள்ளது. தற்போது இந்த திட்டத்திற்குதான் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல, இந்தியா சார்பில் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கவும், வெள்ளி கோளை ஆய்வு செய்ய உள்ள 'வீனஸ் ஆர்பிட்டர்' மிஷனுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications