விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, BSNL-க்கு ரூ 89,047 கோடி- மத்திய அமைச்சரவை முடிவுகள் என்ன?
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ89,047 கோடி நிதி உதவி உள்ளிட்டவைகளுக்கு ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.
மத்திய அமைச்சரவை முடிவுகள் விவரம்:

பிஎஸ்என்ல் நிறுவனத்துக்கு ரூ.89,047 கோடி: புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சமபங்கு அளிப்பதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் இதில் அடங்கும். இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்தின் மூலம் நாட்டின் தொலை தூரப் பகுதிகளுக்கும் தொடர்பு வசதி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நிலையான தொலைத்தகவல் சேவை நிறுவனமாக பிஎஸ்என்எல் வளர்ச்சி பெறும்.

துவாரகா விரைவுச் சாலை: துவாரகா விரைவுச்சாலைக்கு ஊக்கமளிக்கும் விதமாக குருகிராமில் ஹூடா சிட்டி சென்டரிலிருந்து சைபர் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 28.50 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த வழித்தடத்தில் 27 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மொத்த செலவு ரூ.5,452 கோடியாக இருக்கும். இந்தத் திட்டத்தை 4 ஆண்டுகளில் நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் 50:50 என்ற விகிதத்தில் செலவை ஏற்கும். ஹரியானா மாநில எம்ஆர்டிசி நிறுவனம் இந்தத் திட்டத்தை செயல்படுத்தும்.
பழைய குருகிராமில் இதுவரை மெட்ரோ ரயில் போக்குவரத்து இல்லை. தற்போதைய திட்டம் பழைய குருகிராமுடன் புதிய குருகிராமை இணைப்பது சிறப்பம்சமாகும். இந்த வழித்தடம் மற்ற ரயில்வே வழித்தடத்தை இணைக்கும். அடுத்த கட்டத்தில் இது இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தை இணைப்பதற்கு வழிவகுக்கும். மேலும் இந்தப் பகுதியில் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும்.

குறைந்தபட்ச ஆதரவு விலை: 2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப் பருவத்திற்கனா குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2023-24-ஆம் ஆண்டு கரீஃப் சந்தைப்பருவத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) மத்திய அரசு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலையில் கீழ்கண்டவாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி விலை என்பது, விவசாய பணியாளர்களுக்கான செலவு, கால்நடைகள் மற்றும் இயந்திரங்களுக்கான செலவு, விதைகள், உரங்கள் மற்றும் நீர்ப்பாசன செலவுகள், பம்ப்செட் போன்றவற்றின் தேய்மானச் செலவுகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். முதல்தர வகை நெல், ஜோவார் - மல்தாண்டி, நீண்ட இழை பருத்தி ஆகியவற்றுக்கு உற்பத்தி விலை தனியாக கணக்கிடப்படவில்லை.

2018-19ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில், உற்பத்தி விலையைவிட குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்குக்கு கூடுதலாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், 2023-24-ஆம் ஆண்டுக்கான கரீஃப் சந்தைப்பருவ குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டுள்ளது. பஜ்ராவுக்கு 82 சதவீதமும், துவரைக்கு 58 சதவீதமும், சோயாபீனுக்கு 52 சதவீதமும், உளுந்துக்கு 51 சதவீதமும், விவசாயிகளுக்கு அதிகமாக கிடைக்கும் மற்ற பயிர்களுக்கு உற்பத்தி செலவைவிட குறைந்தபட்சம் 50 சதவீத அளவுக்கு விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கும். கடந்த சில ஆண்டுகளாக பருப்பு, எண்ணெய் வித்துக்கள், சிறுதானியங்கள் போன்றவற்றின் சாகுபடியை அரசு ஊக்குவிப்பதுடன் அவற்றுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து வழங்கி வருகிறது. இது தவிர தேசிய விவசாயிகள் வளர்ச்சித்திட்டம் (ஆர் கே வி ஒய்), தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி விவசாயிகளுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. 2022-23-ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி நாட்டின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 330.5 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய 2021-22-ஆம் ஆண்டைவிட 14.9 மில்லியன் டன் அதிகமாகும். அத்துடன் கடந்த 5 ஆண்டுகளில் மிக அதிக உற்பத்தி இதுவாகும்.












Click it and Unblock the Notifications