ரூ.2,157 கோடியில் மரக்காணம் - புதுச்சேரி 4 வழிச்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்! ரூட் இதுதான்
டெல்லி: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து புதுச்சேரிsஇடையே 46 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.2,157 கோடி செலவில் 4 வழிச்சாலை அமைக்க பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
டெல்லியில், இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அதன்படி, தமிழகத்தில் புதுச்சேரி - மரக்காணம் இடையே 4 வழிச்சாலை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இந்த திட்டம் Hybrid Annuity Mode முறையில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டத்துக்கான மொத்த செலவு சுமார் 2,157 கோடியாகும். இந்த நிதியை வைத்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து புதுச்சேரிக்கு 46 கிலோமீட்டர் நீளத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இந்த மார்க்கத்தில் இருவழிச்சாலை உள்ளது. இதனை 4 வழி சாலையாக இந்த திட்டம் மாற்றுகிறது.
தற்போது, சென்னை, புதுச்சேரி விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களை இருவழி தேசிய நெடுஞ்சாலை 332A (NH-332A) மற்றும் அதனுடன் தொடர்புடைய மாநில நெடுஞ்சாலைகள் இணைத்து வுருகின்றன. இதனால் மக்கள் தொகை அதிகம் உள்ள இடங்களில் வாகன நெரிசல் ஏற்படுகிறது.
இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தத் திட்டம் மரக்காணம் முதல் புதுச்சேரி வரை சுமார் 46 கிலோமீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை NH-332A-வை கட்டமைப்பாக கொண்டு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த திட்டம் 2 முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் (NH-32, NH-332) மற்றும் இரண்டு மாநில நெடுஞ்சாலைகள் (SH-136, SH-203) ஆகியவற்றை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் பட்சத்தில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரம் குறையும். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும். அதுமட்டுமின்றி வேகமாக வளர்ந்து வரும் சென்னை, புதுச்சேரி விழுப்புரம் மற்றும் நாகப்பட்டினம் போன்ற நகரங்களுக்கான போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்தும்.
அதுமட்டுமின்றி மரக்காணம் - புதுச்சேரி பிரிவு பிராந்திய பொருளாதார வளர்ச்சியில் இந்த நான்கு வழிச்சாலை முக்கிய பங்காற்றும். புதுச்சேரிக்கு சுற்றுலா, வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு ஊக்கம் அளிக்கும். இந்த திட்டம் தோராயமாக 8 லட்சம் மனித வேலை நாட்களையும், மறைமுகமாக 10 லட்சம் மனித வேலை நாட்களையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications