மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார்
இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று பரவல் மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய மாநில அரசுகள் மீண்டும் அறிவுறுத்தல்களை விடுத்துள்ளன.

கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதற்கு எக்ஸ்.பிபி 1 வைரஸ் திரிபே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பெருந்தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது.
கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று பாதிப்பு உயர்ந்து இருப்பது மக்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்தது. கொரோனா பாதிப்பு நேற்றை விட 20 சதவிகிதம் உயர்ந்தது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, நாட்டில் ஒருநாள் கொரோன பாதிப்பு 12,591 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 65,286- ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், இன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை தளபதிகள் மாநாடு இன்று டெல்லியில் நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில் ராஜ்நாத்சிங் கலந்து கொள்வதாக இருந்தது.
ஆனால், தொற்று உறுதி செய்யப்பட்டதால் ராஜ்நாத்சிங் பங்கேற்கவில்லை. ராஜ்நாத் சிங்கிற்கு லேசான அறிகுறிகள் உள்ளது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ள ராஜ்நாத்சிங் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான முதல் ராணுவ தளபதிகளின் மாநாட்டில் ராஜ்நாத்சிங் பங்கேற்று இருந்தார்.












Click it and Unblock the Notifications