கச்சத்தீவு, மீனவர் விவகாரமா? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை பயணம்! ஆகஸ்ட்டில் மோடி விசிட்!
டெல்லி: இலங்கை விவகாரங்களில் மத்திய அரசு மீண்டும் தீவிரம் காட்டும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பதவியேற்ற 10 நாட்களிலேயே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை செல்கிறார். பிரதமர் மோடி ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்வதற்கான முன்னேற்பாடுகளை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நேரத்தில் பாஜகவினர் திடீரென கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்தனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு குறித்த தகவல்களைப் பெற்றதாக கூறப்பட்டது. இதனடிப்படையில் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ் அரசு. திமுக எதிர்க்காமல் இருந்தது என பாஜக பிரசாரம் செய்தது. இதற்கு காங்கிரஸ், திமுக தரப்பில் பதிலடி தரப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசியிருந்தனர்.

தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்து மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி பதவியேற்றுள்ளது. மத்திய பாஜக ஆட்சி பதவியேற்ற 10 நாட்களிலேயே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பயணம் மேற்கொள்கிறார். இலங்கையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே மற்றும் சிங்கள- தமிழர் தலைவர்களை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசுகிறார். இலங்கையில் இந்தியாவின் முதலீட்டுத் திட்டங்களை அதிகரிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில் சிங்கள, தமிழர் தலைவர்களையும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகளும் அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த பயணத்தின் போது மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கச்சத்தீவு விவகாரம், மீனவர்கள் பிரச்சனை ஆகியவற்றில் மத்திய பாஜக அரசு சில முக்கியமான முடிவுகளை மேற்கொள்ள சாத்தியமிருக்கிறது; மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடியின் அடுத்தடுத்த இலங்கை பயணங்களும் இதனையே வெளிப்படுத்துகின்றன என்கின்றன டெல்லி தகவல்கள்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் இன்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் இலங்கை சிறைகளில் வாடும் 15 தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; 162 தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications