கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையம்.. மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் புத்தாண்டு இலங்கை பயணம் வெல்லுமா?
டெல்லி: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று இலங்கை பயணம் செல்கிறார். இந்த பயணத்தின் போது கிடப்பில் இருக்கும் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க ஜெய்சங்கர் வலியுறுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் இந்த முனையத்தில் இந்தியாவின் கொள்கலன்கள்தான் 60% அளவுக்கு கையாளப்படுகின்றன. மேலும் துறைமுக நகரையும் சீனா உருவாக்கி வருகிறது.

கொழும்பு கிழக்கு முனையம்
இந்த நிலையில் சீனா கைவசம் இருக்கும் சர்வதேச கொள்கலன் முனையம் அருகே கிழக்கு கொள்கலன் முனையம் ஒன்றை உருவாக்க 2019-ல் இந்தியா-இலங்கை-ஜப்பான் ஒப்பந்தம் போட்டது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றவிடாமல் சீனா, துறைமுக தொழிற்சங்கங்கள், இலங்கை அரசியல் கட்சிகளை தூண்டிவிட்டு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

சீனாவுக்கு சிக்கல்
ஆனால் எப்படியாவது கிழக்கு கொள்கலன் முனையத்தை வசப்படுத்தியாக வேண்டும் என்கிற ராஜதந்திர நெருக்கடியில் இருக்கிறது இந்தியா. நமது நாட்டின் எல்லைகளில் வாலாட்டி தாக்குதல் நடத்தும் சீனாவுக்கு சரியான பதிலடியாக கிழக்கு கொள்கலன் முனையத்தை கைப்பற்றுவதுதான் என்கிற முடிவில் மத்திய அரசு உள்ளது. இந்த முனையம் இந்தியாவின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டால் சீனா அமைத்த முனையம் பெரும் வருவாய் இழப்பை எதிர்கொள்ள நேரிடும்.

இலங்கை பயணம்
இந்த பின்னணியில் இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்க இலங்கை பயணம் மேற்கொள்கிறார். இலங்கைக்கு 2021-ம் ஆண்டு வருகை தரும் முதலாவது வெளிநாட்டு அமைச்சர் ஜெய்சங்கர்தான்.

கோத்தபாய, மகிந்தவுடன் சந்திப்பு
இலங்கையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரை ஜெய்சங்கர் சந்தித்து பேசுகிறார். இலங்கை விவகாரங்களில் நீண்ட அனுபவம் கொண்டவர் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர். நிச்சயம் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்தியா வசம் கைப்பற்றிவிடுவார் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றன டெல்லி வெளியுறவு வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications