50% சில்வர் - 40% செம்பு -5% நிக்கல் -5% ஜிங்க்! புதிய 75 ரூபாய் நாணயத்தின் ஸ்பெஷல் என்ன?
டெல்லி: 10 ரூபாய் காயின் பஞ்சாயத்தே பல இடங்களில் இன்னும் தீராத நிலையில் 75 ரூபாய் புதிய நாணயத்தை வெளியிடுகிறது மத்திய நிதித்துறை.
வரும் 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை ஒட்டியும், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதையொட்டியும் ரூ.75 நாணயம் வெளியிடப்படுகிறது.
புதிதாக வெளியிடப்பட்டுள்ள 75 ரூபாய் நாணயமானது 50% சில்வர், 40% செம்பு, 5% நிக்கல், 5% ஜிங்க் உள்ளிட்ட உலோகப் பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 10 ரூபாய் காயின் வடிவத்திலேயே இந்த நாணயம் இருக்கும் எனத் தெரிகிறது.

மத்திய அரசு வெளியிடும் 75 ரூபாய் நாணயத்தில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் அசோகச்சின்னம் இடம்பெற்றுள்ளன. அதேபோல் இந்திய நாடாளுமன்றம் என்ற வார்த்தை ஆங்கிலத்திலும் அந்த நாணயத்தில் இடம்பெறுகின்றன.
நாளை மறுதினம் புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நிலையில் அதில் 25 அரசியல் கட்சிகள் கலந்துகொள்கின்றன. காங்கிரஸ், திமுக உட்பட 19 எதிர்க்கட்சிகள் விழாவை புறக்கணித்துள்ளன.

இதனிடையே நாளை மறுதினம் வெளியிடப்படும் இந்த நாணயமானது மக்கள் கைகளில் புழக்கத்திற்கு வருவதற்கு குறைந்தது மூன்று மாதங்களாவது எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது. 75 ரூபாய் நாணயம் பயன்பாட்டுக்கு வந்தாலும் 100 ரூபாய் நோட்டுக்களுக்கு உள்ள டிமாண்ட் இருந்துகொண்டே தான் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் ரிசர்வ் வங்கி பலமுறை கூறியும், மக்கள் மத்தியில் இன்னும் 10 ரூபாய் நாணயம் பற்றியே போதிய விழிப்புணர்வு இல்லாத போது 75 ரூபாய் நாணயம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது.












Click it and Unblock the Notifications