டோல்கேட் கட்டண வசூலில் மாற்றம்.. அமலாகும் சேட்டிலைட் தொழில்நுட்ப முறை! மத்திய அரசின் மேஜர் முடிவு
டெல்லி: சுங்கச்சாவடிகளில் (டோல்கேட்) நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை தவிர்க்கும் வகையில் சேட்டிலைட் முறையில் டோல்கேட் கட்டணம் செலுத்தும் முறையை அறிமுகம் செய்வது தொடர்பான அறிவிப்பை மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. ஜிஎன்எஸ்எஸ் என அழைக்கப்படும் இந்த முறையில் எப்படி சேட்டிலைட் உதவியுடன் டோல்கேட்டில் கட்டணம் வசூலிக்கப்படும் என்பது பற்றிய விபரம் வருமாறு:
நம் நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்த பணம் செலுத்தும் நடைமுறை உள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே டோல்கேட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த டோல்கேட்டுகளில் முதலில் வாகனங்களை நிறுத்தி பணம் செலுத்த வேண்டி இருந்தது. இதனால் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் இதனால் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இதையடுத்த பாஸ்டேக் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்மூலம் பாஸ்டேக்கை வாகனங்களில் பயன்படுத்தும்போது டோல்கேட்டில் நின்று செல்லும் நேரம் என்பது குறைந்தது. இருப்பினும் கூட சில சந்தர்ப்பங்களில் பாஸ்டேக் முறையிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் தற்போது டோல்கேட்டில் கட்டணம் செலுத்தும் முறையில் புதிய நடைமுறையை மத்திய சாலை போக்குவரத்து துறை கொண்டு வந்துள்ளது. ஜிஎன்எஸ்எஸ் (GNSS)அல்லது Global Naviagation Satellite System முறையில் கட்டணம் செலுத்தும் முறை நடைமுறைக்கு வர உள்ளது.
இது சேட்டிலைட் அடிப்படையில் செயல்பட கூடியது. சேட்டிலைட் இணைப்புக்காக ஆன் போர்ட் யூனிட் (On-Board Units)எனப்படும் ஓபியூ (OBU) கருவிகள் வாகனங்களின் வெளிப்பபுறத்தில் பொருத்தப்படும். இந்த கருவி பொருத்தப்படும் வாகனங்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் சேட்டிலைட்டுடன் இணைக்கப்படும். இதன்மூலம் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தொலைவு என்பது கணக்கிடப்படும்.
அதன்பிறகு குறிப்பிட்ட அந்த நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டுகளில் ஒபியூ கருவி பொருத்தப்பட்ட வாகனம் சென்றவுடன் வங்கி கணக்கில் இருந்து ஸ்கேனர் மூலம் எளிதாக செலுத்த முடியும். இந்த கட்டணம் என்பது தேசிய நெடுஞ்சாலையில் வாகனம் பயணித்த தொலைவின் அடிப்படையில் தானாகவே பிடித்தம் செய்யப்படும். பணம் நேரடியாக வங்கி கணக்கில் இருந்து எடுத்து கொள்ளப்படும்.
இந்த ஜிஎன்எஸ்எஸ் முறை என்பது முதலில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. ஜிஎன்எஸ்எஸ் திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் வரை பாஸ்டேக் முறையும் செயல்பாட்டில் இருக்கும். இந்த புதிய ஜிஎன்எஸ்எஸ் திட்டத்துக்காக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் சார்பில் தேசிய நெடுஞ்சாலை கட்டணம் விதிகள் (Determination of Rates and Collection) 2008 -ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விதியின் 6வது பிரிவின்படி இந்த ஜிஎன்எஸ்எஸ் வாகனங்களுக்காக டோல்கேட்டுகளில் தனியாக வழிப்பாதை வழங்க வழி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வாகனங்கள் விரைவாக செல்ல முடியும்.












Click it and Unblock the Notifications