ராமர், கிருஷ்ணர் என 53 கோயில்களை இடிக்க மத்திய அரசு திட்டம்.. பாஜக இந்துக்களுக்கு எதிரானது -ஆம்ஆத்மி
டெல்லி: 53 கோயில்களை இடிப்பதற்கு அனுமதிகோரி மத்திய அரசு கடிதம் எழுதி இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு டெல்லியில் உள்ள கோயில்களை இடிக்க திட்டமிடுவதாக குற்றம்சாட்டினார்.
"பாஜக டெல்லியில் இருக்கும் கோயில்களை இடிப்பதற்காக எவ்வாறு திட்டமிட்டு உள்ளார்கள் என்று நான் வெளிப்படுத்துகிறேன். நாடு முழுவதும் பாஜக மதத்தின் பெயரால் நாடகமாடி வெறுப்பை பரப்பி வருகிறது. ஆனால், தலைநகர் டெல்லியில் அமைந்து இருக்கும் 53 கோயில்களை இடிக்க மோடி அரசு திட்டமிட்டு இருக்கிறது.
இதற்கு அனுமதி வழங்குமாறு டெல்லி அரசுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி இருக்கிறது. டெல்லியின் கஸ்தூரிபா நகர், தியாகராஜ் நகர், நரோஜி நகர், நேதாஜி நகர், சரோஜினி நகர், ஸ்ரீனிவாஸ்புரி, முகமதுபூர் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கோயில்களை இடிக்க அனுமதி கோரியுள்ளார்கள்.
மத்திய அரசு இடிக்க திட்டமிட்டு உள்ள கோயில்களின் பட்டியலில் "ராமர் கோயில், கிருஷ்ணர் கோயில், மகாதேவ் கோயில், சாய் பாபா கோயில், குருத்வாரா" போன்றவையும் அடங்கும். கோயில்களை இடிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் இந்த கடிதம் பாஜகவின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி இருக்கிறது. பாஜக மதத்திற்கு எதிரானது." என்றார்.