வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி... விரைவில் வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
டெல்லி: வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சுற்றுலாத்துறை முடங்கியுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதாரமும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு தடுப்பூசி முகாம்களை அதிகம் நடத்தி வருகின்றன. இதனால் முன்பைக் காட்டிலும் இப்போது கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்துள்ளன.
விமான போக்குவரத்துறை, சுற்றுலா, விருந்தோம்பல் துறையை புத்துயிர் அளித்து மீட்டெடுக்கும் நோக்கில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. முதற்கட்டமாக 5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா கொடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் இலவச விசா திட்டம் குறுகிய கால வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் வகையில் உள்ளது. இதனிடையே இலவச விசா திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் ரூ.100 கோடி வரை வருவாய் பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் அனுமதி தருவதா அல்லது குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் இந்தியாவுக்கு வர அனுமதி தருவதா என்பது பற்றியும் தீவிர ஆலோசனை நடந்து வருகின்றன. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் மற்றும் கொரோனா கட்டுக்குள் உள்ள நாடுகள் என இரண்டாக வகையாக பிரித்து புள்ளியியல் அடிப்படையில் மத்திய அரசு முடிவெடுக்க உள்ளது.
பொருளாதாரத்தை மீட்டெடுத்து நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள மத்திய அரசு, முதல் பணியாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வது தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறது. கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், டெல்லி, மும்பை, ராஜஸ்தான், கோவா போன்ற மாநிலங்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் வகையில் இருக்கின்றன.












Click it and Unblock the Notifications