இந்தியாவில் யாருக்குமே குரங்கு அம்மை பாதிப்பு இல்லை! மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் கடிதம்!
டெல்லி: இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என்றும் குரங்கு அம்மை பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. மேலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பான பரிசோதனைகளை மேற்கொள்ள ஆய்வகங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் அதிவேகமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது குரங்கு அம்மை பாதிப்பு. குரங்கு அம்மை (Monkeypox) நோய், ஒரு தீவிரமான வைரஸ் பாதிப்பாகும். இது வழக்கமாக 2 முதல் 4 வாரங்களுக்கு நீடிக்கும் காலவரம்புக்கு உட்பட்ட நோயாகும். குறிப்பிடத்தக்க சுகாதார சூழல் உடையவர்களுக்கோ அல்லது இல்லாதவர்களுக்கோ தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குரங்கு அம்மை பாதிப்பு என்பது காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவற்றின் மூலம் அறிய முடியும். குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டால் · கண் வலி அல்லது பார்வை மங்குதல்; மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம்; உணர்வு மாற்றம், வலிப்பு; சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.
குரங்கு அம்மை பாதிப்பானது ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள்,
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண்கள் ஆகியோரை கடுமையாக தாக்கும் அபாயம் உள்ளது. நீண்டநாள் நெருங்கிய தொடர்புள்ளவர்களின் பெரிய சுவாச துளிகள் வாயிலாக, மனிதர்களில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும். பாலியல் தொடர்பு உட்பட உடல் ரீதியான தொடர்புகள் மூலமாக உடலில் இருந்து வெளியேறும் திரவங்களுடன் தொடர்பு அல்லது உடல் காயம் உள்ளிட்டவை மூலம் பரவும்.

இந்தியாவில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. அண்மையில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள ஒரு நாட்டிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்த ஒரு இளம் ஆணுக்கு அந்த நோய் இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
அவருக்குக் குரங்கு அம்மை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.
இதனிடையே குரங்கு அம்மை பரவுதல் தடுப்பு தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பி வைத்துள்ளது. அதில், குரங்கு அம்மை நோய் பாதிப்பை கண்டறிய பரிசோதனை நிலையங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications