அடுத்தடுத்த அதிரடிகள்.. மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல்-களமிறங்குதே மத்திய பாஜக அரசு!
டெல்லி: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசானது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்க இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பானது ஜாதி விவரங்களையும் உள்ளடக்கிய ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்குமா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
பாஜகவின் கொள்கை செயல் திட்டங்களில் முதன்மையானவையாக இருந்தவை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவு ரத்து, சிஏஏ எனப்படும் குடியுரிமை சட்ட திருத்தம், மகளிர் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்டவை. இவைகளை கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அடுத்தடுத்து நிறைவேற்றிவிட்டது பாஜக.

பாஜகவால் செயல்படுத்தாமல் இருக்கும் வாக்குறுதிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பும் ஒரே நாடு ஒரே தேர்தலும்தான். மக்கள் தொகை கணக்கெடுப்பு கொரோனா பாதிப்பால் நடைபெறாமல் இருந்தது. மக்கள் தொகை கணக்கெடுப்பு உடனே நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. குறிப்பாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டாக வேண்டும் என்பது பல அரசியல் கட்சிகள் கோரிக்கை. இதனையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு தயாராகிக் கொண்டிருக்கிறதாம். ஆனால் இதில் ஜாதி விவரங்கள் சேகரிக்கப்படுமா? இது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக இருக்குமா? என்பது பினனர்தான் தெரிய வரும் என்கின்றன டெல்லி தகவல்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற பாஜகவின் இந்த வாக்குறுதி கடும் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது. நாட்டின் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் பல மாநிலங்களின் முதல்வர்களும் இது சாத்தியமே இல்லாதது என விமர்சித்து வருகின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசோ, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை அமைத்து அந்த குழுவும் மக்களிடம் கருத்து கேட்டு அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறது. அந்த அறிக்கையில், லோக்சபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படலாம்; உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் 100 நாட்களில் தேர்தல் நடத்த வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. மேலும் சட்ட ஆணையமும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவான பரிந்துரையை வழங்க இருக்கிறது. இதனால் 2029 லோக்சபா தேர்தலுடன் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தப்படக் கூடிய வாய்ப்புகள் வரலாம் எனவும் டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications