கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலை- மாணவர்கள் போராட்டம்- மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு!
டெல்லி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளும் 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அறிக்கை அனுப்ப வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா கொடூர சம்பவத்துக்கு நீதி கோரி நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பயிற்சி மருத்துவர்களின் பணிகளை முறைப்படுத்த வேண்டும் என்பது மருத்துவ மாணவர்களின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று.

கொல்கத்தா படுகொலையில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்ட போதும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட ஆர்ஜி கர் மருத்துவமனை அடித்து நொறுக்கப்பட்டு சூறையாடப்பட்டது. இந்த சம்பவங்கள் கொல்கத்தாவில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே மருத்துவ மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகமானது அனைத்து போலீசாருக்கும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், நாட்டின் எந்த பகுதியில் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடந்தாலும் அப்பகுதியின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக 2 மணி நேரத்துக்கு ஒரு முறை மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த அறிக்கையை வாட்ஸ் அப், இ மெயில் மற்றும் ஃபேக்ஸ் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும் என்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு.












Click it and Unblock the Notifications