இந்திய கடற்படைக்கு ரூ.1,752 கோடியில் "ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள்" வாங்க மத்திய அரசு ஒப்பந்தம்!
டெல்லி: இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படைக்கு ரூ.1,752 கோடியில் "ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள்" வாங்க மத்திய அரசு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 12.7 மி மீ நிலைப்படுத்தப்பட்ட ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகளை (எஸ்ஆர்சிஜி- SRCG) மொத்தம் ரூ.1752.13 கோடி செலவில் தயாரித்து வழங்குவதற்காக கான்பூரின் ஏவெய்ல் (AWEIL) நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் இன்று (பிப்ரவரி 14, 2024) ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

சமச்சீரற்ற சூழல் உள்ள நிலையில் கப்பல்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சிறிய இலக்குகளை துல்லியமாக எதிர்கொள்ள இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையின் திறனை எஸ்ஆர்சிஜி மேம்படுத்தும்.
இந்தக் கொள்முதல் "பாதுகாப்புத் துறையில் தற்சார்பு" என்ற தொலைநோக்குப் பார்வைக்கு மேலும் ஊக்கமளிக்கும். இந்த ஒப்பந்தம் 5 ஆண்டுகளில் 125-க்கும் மேற்பட்ட இந்திய விற்பனையாளர்கள் மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாதுகாப்பு உற்பத்தியில் ஒரு பெரிய வாய்ப்பை ஏற்படுத்தும்.
இதேபோல பாதுகாப்புப் படையினருக்கான மருத்துவ சேவை பிரிவு, ஐஐடி ரூர்க்கி ஆகியவை பணியிலிருக்கும் வீரர்களின் மருத்துவ சிகிச்சை, நோயாளிகளின் பராமரிப்பை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சியில் இணைந்து செயல்படுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐடி ரூர்க்கி இயக்குநர் பேராசிரியர் கமல் கிஷோர் பந்த், பாதுகாப்புப் படையின் மருத்துவ சேவைப் பிரிவு தலைமை இயக்குநர் சார்பில் லெப்டினென்ட் ஜெனரல் எஸ் கே சிங் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட்டு உயிரி மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆராய்ச்சி தவிர, ஆசிரியர்கள் பரிமாற்றத் திட்டம், கூட்டுக் கல்வி நடவடிக்கைகள் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு துறையில் புதிய தொழில்களை ஊக்குவித்தல் ஆகியவையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் உள்ளன.
அத்துடன் பாதுகாப்புப்படை மருத்துவ சேவைகள், ஐஐடி ரூர்க்கியின் நிபுணத்துவத்தை புதிய மருத்துவ சாதனங்களின் மேம்பாடு, ரோபோடிக்ஸ், நானோ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளில் பயன்படுத்த முடியும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications