எலக்சன் வருதுல்ல...சீக்கியர்களை மகிழ்விக்க கர்தார்பூர் வழித்தடம் நாளை முதல் திறப்பு-மத்திய அரசு
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள தேரா பாபா நானக் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த சீக்கியர்கள் விசா இல்லாமல் சென்று வழிபாடு நடத்துவதற்காக கர்தார்பூர் வழித்தடம் நாளை முதல் திறக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதற்கான அறிவிப்பை தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சீக்கிய மதத்தை தோற்றவித்த குருநானக் பாகிஸ்தானின் கர்தார்பூரில் 19 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது நம்பிக்கை. இதனால் இந்திய எல்லையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கர்தார்பூரில் தர்பார் சாஹிப் எனும் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த குருத்வாராவுக்கு சென்று வழிபாடு நடத்துவது சீக்கியர்களின் கடமைகளில் ஒன்று.
இந்த குருத்வாராவுக்கு சீக்கியர்கள் விசா இல்லாமல் புனித பயணம் மேற்கொள்வதற்காக இந்தியாவின் குருதாஸ்பூர் - பாகிஸ்தானின் கர்தார்பூர் ஆகியவற்றை இணைக்க உருவாக்கப்பட்டதுதான் கர்தார்பூர் வழித்தடம். 1999-ம் ஆண்டு முதல் கர்தார்பூர் வழித்தடம் குறித்து இந்தியா, பாகிஸ்தான் விவாதித்து வந்தன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டு திறந்துவிடப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவலைக் காரணம் காட்டி கர்தார்பூர் வழித்தடம் மூடப்பட்டது.

கர்தார்பூர் வழித்தடம் திறப்பு
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்தார்பூர் வழித்தடம் நாளை முதல் திறக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் குருநானக் மற்றும் சீக்கியர் மதம் மீது பிரதமர் மோடி வைத்துள்ள மரியாதையை வெளிப்படுத்துகிற முடிவுதான் கர்தார்பூர் வழித்தடம் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்படும் என்கிற மத்திய அரசின் அறிவிப்புக்கு பஞ்சாப் மாநில அரசும் அரசியல் கட்சிகளும் வரவேற்றுள்ளன.

பஞ்சாப் வரவேற்றது
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து உள்ளிட்டோர் வரவேற்றுள்ளார். மேலும் பஞ்சாப் மாநில அமைச்சர்கள் வரும் 18-ந் தேதியன்று பாகிஸ்தான் சென்று வழிபாடு நடத்த உள்ளதாகவும் முதல்வ சரண்ஜித் சிங் சன்னி அறிவித்துள்ளார். மத்திய அரசு திடீரென சீக்கியர்களை மகிழ்ச்சிபடுத்தும் அறிவிப்பை வெளியிட்டதில் அரசியல் ஏதும் இல்லாமல் இல்லை என்றும் மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பஞ்சாப்பும் பாஜகவும்
பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு அடிப்படை கட்டமைப்பு இல்லை. சிரோமணி அகாலிதளத்துடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு வந்தது. ஆனால் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவுடனான கூட்டணியை அகாலிதளம் முறித்துக் கொண்டது. இதனால் பஞ்சாப்பில் பாஜக தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.

தேர்தல் வியூகத்தின் முதல் படி
இந்த பின்னணியில் காங்கிரஸில் ஏற்பட்ட உட்கட்சிப் பூசலால் முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் பதவி விலகினார். அத்துடன் காங்கிரஸில் இருந்து விலகுவதாகவும் அறிவித்த அவர், பாஜகவுடன் தேர்தல் கூட்டணி அமைக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். இது பஞ்சாப்பில் சோர்வில் இருந்த பாஜகவினருக்கு தெம்பூட்டுவதாக இருந்தது. இதன்பின்னர் கடந்த சில நாட்களாக பஞ்சாப் மாநில பாஜக தலைவர்களை டெல்லிக்கு வரவழைத்து அக்கட்சி மேலிடத் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதனையடுத்தே இப்போது கர்தார்பூர் வழித்தடம் திறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது மத்திய பாஜக அரசு என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications