மோடி ரகசியம் சொல்லவா? காங்கிரஸ் எம்பியால் ஆக்ரோஷமான அமித்ஷா! ஷாக்கான லோக்சபா! திகைத்த சபாநாயகர்
டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் விவாதத்தில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் மணிப்பூர் வன்முறை பற்றி பேசியதோடு, பிரதமர் மோடியின் பெயரை பயன்படுத்தி பேசி ரகசியத்தை வெளியிட முடியும் எனக்கூறியபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோபத்தின் உச்சிக்கு சென்று இருக்கையை விட்டு எழுந்து ஆக்ரோஷமாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சபாநாயகர் ஓம்பிர்லா உள்பட பலர் ஷாக்கான வீடியோ வேகமாக பரவி வருகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக வன்முறை நடந்து வருகிறது. ஆனால் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் எதுவும் பேசவில்லை. கடந்த மாதம் 20ம் தேதி முதல் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறியும் அவர் மவுனம் காத்து வருகிறார்.

இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறை பற்றி லோக்சபாவில் பிரதமர் மோடியை பேச வைக்கும் வகையில் எதிர்க்கட்சிகளின் ‛‛இந்தியா'' கூட்டணி சார்பில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன்படி இன்று நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் இன்று மதியம் 12 மணி முதல் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கியது.
இந்த தீர்மானத்தின் மீது இன்று காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் முதல் ஆளாக பேசினார். அப்போது அவர் மத்திய அரசு, மணிப்பூர் அரசு மற்றும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுபற்றி கவுரவ் கோகாய் பேசும்போது கூறியதாவது: மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனமாக இருந்து வருகிறார். அவர் தனது மவுனத்தை கலைக்க வேண்டும். மணிப்பூர் முதல்வரை இதுவரை பதவியில் இருந்து நீக்காதது ஏன்?. மணிப்பூருக்கு ராகுல் காந்தி சென்றுள்ளார். இந்தியா கூட்டணியும் சென்றது. இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் செல்லாதது ஏன்?

பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரம் குறித்து பேச 80 நாட்கள் எடுத்து கொண்டது ஏன்? அதானி விவகாரம் குறித்து பேசும்போதும் பிரதமர் மோடி அமைதியாக இருந்தார்(இந்த வேளையில் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்). நான் அதானி பெயரை எடுத்ததும் இங்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சீனா ஆக்கிரமிப்பு பற்றி பேசும்போதும் பிரதமர் அமைதியாக இருந்தார். ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி, ஜி ஜின்பிங்கிடம் என்ன பேசினார்? என்பது வெளியே தெரிவிக்கப்படவில்லை'' என்றார்.
மேலும் அவர், ‛‛பிரதமரும், அவை தலைவரும் தங்களது அலுவலகத்தில் என்ன பேசுகின்றனர் என்ற ரகசியத்தை கூற தயார்'' என்றார். இந்த வேளையில் தனது இருக்கையில் அமர்ந்திருந்த அமித்ஷா ஆக்ரோஷமாக எழுந்த அவர் பிரதமர் மோடியின் பெயரை குறித்து பேச கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வேளையில் அமித்ஷா கண்கள் சிவந்த நிலையில் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாயை நோக்கி கைகள் நீட்டி தனது கோபத்தை கடுமையாக காட்டினார். அமித்ஷாவுக்கு ஆதரவாக பிற மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் கோஷமிட்டனர்.

இதனால் நாடாளுமன்ற லோக்சபா பரபரப்பான கட்டத்துக்கு சென்றது. சபாநாயகர் ஓம்பிர்லா செய்வதறியாது ஒரு நிமிடம் திகைத்தார். தொடர்ந்து பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அடுத்த சில வினாடிகளில் மீண்டும் காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் பேசினார். இந்த நிலையில் தான் கவுரவ் கோகாய் எம்பியின் பேச்சுக்கு அமித்ஷா ஆக்ரோஷமாக எதிர்ப்பு தெரிவித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications