'அவங்க' ஓட்டுக்காகத்தான் 'கிரிமினல்' பிரஜ்வல் மேல் கை வைக்காம இருந்த காங்கிரஸ்-போட்டுடைத்த அமித்ஷா!
டெல்லி: கர்நாடகாவில் தேர்தல் ஆதாயத்துக்காகத்தான் ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா மீது காங்கிரஸ் அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் நாட்டை விட்டே தப்பி ஓட அனுமதித்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
300 பெண்களை நாசமாக்கி 3000 ஆபாச வீடியோக்களில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்களை பொதுவெளியில் கசியவிட்டது பாஜகவா? காங்கிரஸா? என இருதரப்பும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணாவை நாட்டை விட்டு தப்பி ஓடவிட்டது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசா? மத்தியில் ஆளும் பாஜக அரசா என்ற அனல் பறக்கும் விவாதமும் களைகட்டி இருக்கிறது.
சித்தராமையா குற்றச்சாட்டு: பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் மத்திய அரசை குற்றம் சாட்டி கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியிருந்ததாவது: வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட், விசா யார் கொடுப்பது? மத்திய அரசுதானே.. மத்திய அரசுக்கு தெரியாமல் பிரஜ்வல் ரேவண்ணா எம்பி வெளிநாடு சென்றுவிட முடியுமா? முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் பிரஜ்வல் ரேவண்ணாவை திட்டம் போட்டு வெளிநாட்டுக்கு ஓடவிட்டவர்.
அமித்ஷா மீது பாய்ச்சல்: பெண்கள் சக்தி பேசுகிற மத்திய அமைச்சர் அமித்ஷா, பிரஜ்வல் ரேவண்ணா போன்ற நபர்களுக்கு சீட் தருவதற்கு ஏன் ஒப்புக் கொண்டாராம்? பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோக்கள் குறித்து ஏற்கனவே பாஜகவுக்கு தெரிந்துவிட்ட பின்னரும் ஏன் ஹாசன் தொகுதியில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்டதாம்? பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்கள் குறித்து தெரிந்தும் ஜேடிஎஸ் கட்சியுடன் ஏன் பாஜக கூட்டணி அமைத்தது? இதற்கு எல்லாம் என்ன அர்த்தம்? இது எல்லாம் எதனை வெளிப்படுத்துகிறது? இது குறித்து எனக்கு விளக்கம் தர வேண்டும் என்றார்.
அமித்ஷா பதிலடி: இதற்கு பதிலளித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பதாவது: ஜேடிஎஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. தற்போது பிரஜ்வல் ரேவண்ணாவின் வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. இதை வைத்து பாஜகவை மடக்க நினைக்கிறது காங்கிரஸ். பெண்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் எந்த ஒரு சக்தியோடும் பாஜக ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளாது என்பதை நான் தெளிவுபடுத்துகிறேன்.
ஒக்கலிகா ஓட்டு அரசியல்: பிரஜ்வல் ரேவண்ணா மீது தேர்தல் முடியும் வரை கர்நாடகா காங்கிரஸ் அரசு எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கவில்லை. ஏனெனில் ஒக்கலிகா கவுடா (வொக்கலிகர்) வாக்கு வங்கி உள்ள பகுதிகளில் தேர்தல் நடந்தது. அந்த வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்படும் என்பதால் காங்கிரஸ் அரசு, பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தது. உங்களுக்கு திராணி இருந்தால் உண்மையைத்தான் சொல்லிப் பாருங்கள். உங்களால்தான் ஒரு கிரிமினல் இந்த நாட்டை விட்டு தப்பி ஓடி இருக்கிறார். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
ஒக்கலிகா பெல்ட்டில் தேர்தல்: கர்நாடகாவில் 14 லோக்சபா தொகுதிகளுக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பெரும்பாலானவை ஒக்கலிகா கவுடா (வொக்கலிகா) ஜாதியினர் பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ள தொகுதிகள். தற்போது ஆபாச சிடியில் சிக்கியிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன். முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் மகன். ஒக்கலிகா கவுடா (வொக்கலிகர்) ஜாதியைச் சேர்ந்தவர்.












Click it and Unblock the Notifications