வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர்!
டெல்லி: இந்தியாவில் சில மாதங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் இரண்டாவது அலை போட்டு புரட்டி எடுத்தது. நாட்டின் தினசரி பாதிப்புகள் 4,00,000-ஐ கடந்து சென்று மிரள வைத்தது.இதனால் கடும் அச்சம் கொண்ட உலக நாடுகள் இந்தியாவுடனான போக்குவரத்து தொடர்பை முற்றிலுமாக துண்டித்தன.
அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் இருந்தும், இந்தியாவுக்கும் பயணிகள் விமான போக்குவரத்தை ரத்து செய்தன.
தற்போது இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வெகுவாக குறைந்து விட்டது. ஆனாலும் ஒரு சில நாடுகளை தவிர பெரும்பாலான நாடுகள் இந்தியர்களை இன்னும் முழுமையாக தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள்
ஒரு சில நாடுகள் கொரோனா தடுப்பூசி போட்டவர்களை மட்டுமே தங்கள் எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர்.சீனா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்ல முடியாததால் அங்கு வேலை பார்க்கும், குறிப்பாக அங்கு உயர்கல்வி படித்து வரும் மாணவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய வெளியுறவு விவகாரங்கள் துறை இணை அமைச்சர் வீ.முரளிதரன் கூறியதாவது:-

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவோம்
இந்திய மாணவர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், ஜார்ஜியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பயணிக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேரும் இந்திய மாணவர்கள் அந்தந்த நாடுகளுக்கு செல்வதற்கான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

எல்லைகளை திறக்கும்
கொரோனா நிலைமை மேம்படும்போது மேலும் பல நாடுகள் இந்தியாவுக்கு எல்லைகளை திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் வீ.முரளிதரன் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலைமை மேம்படுவதைக் கருத்தில் கொண்டு இந்தியர்களின் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு கடந்த வாரம் பல்வேறு நாடுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது.

போர்ட்டல் உருவாக்கம்
படிப்பிற்காக வெளிநாடு செல்ல விரும்புவோருக்காக மத்திய அரசு 'உலகளாவிய இந்திய மாணவர் போர்ட்டலை' (ஜி.ஐ.எஸ்.பி) கடந்த வாரம் உருவாக்கியுள்ளது. வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள், அங்கு உள்ள படிப்புகள், இதற்காக உதவும் நோடல் அதிகாரிகள் உள்ளிட்ட விவரங்கள் இந்த போர்ட்டலில் இடம்பெறுள்ளன. இது மாணவர்களுக்கு பெரும் வழிகாட்டியாக அமையும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications