ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் கேலி செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்: ராகுல் காந்தி
டெல்லி: லோக்சபாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தால் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேலி செய்து சிரிக்கிறார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் 90% மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சினைக்கு இப்படி ஒரு புறக்கணிப்பு பதில் பாஜகவின் மனநிலையையும், எண்ணங்களையும், நோக்கங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், மோடி அரசு ராணுவ வீரர்களை அக்னிவீர் என்ற சக்கரவியூகத்தில் சிக்க வைத்துள்ளது. அக்னிவீரர்களின் ஓய்வூதியத்திற்காக பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட இல்லை. உங்களை நீங்களே தேசபக்தர் என்று சொல்லிக் கொள்கிறீர்கள். ஆனால், அக்னிவீரர்களுக்கு உதவுவது, ராணுவ வீரர்களுக்கு பணம் கொடுப்பது என்று வரும்போது, பட்ஜெட்டில் ஒரு ரூபாயைக் கூட பார்க்க முடிவதில்லை.

தியாகி அக்னிவீரரின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் முன்னதாக தெரிவித்திருந்தார். அவர் தவறான தகவலைத் தந்துள்ளார். வீரமரணம் அடைந்த அக்னிவீரரின் குடும்பத்திற்கு காப்பீடு தொகை வழங்கப்பட்டதே தவிர இழப்பீடு வழங்கப்படவில்லை. இது உண்மை, யாரும் மறுக்க முடியாது.
இந்தியாவின் பட்ஜெட்டை 20 அதிகாரிகள் இணைந்து தயாரித்துள்ள நிலையில் அதில் ஒரு சிறுபான்மையினர் மற்றும் ஒரு OBC மட்டுமே உள்ளனர். அதாவது நாட்டின் 73% மக்கள் இதில் சேர்க்கப்படவில்லை.
இந்தியா கூட்டணியின் சார்பில் நான் நாட்டு விவசாயிகளுக்குச் சொல்ல விரும்புகிறேன். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிப்போம்.
இந்த பட்ஜெட்டுக்கு முன் நாட்டின் நடுத்தர வர்க்கத்தினர் பிரதமரை ஆதரித்திருக்கலாம். ஏனென்றால், கொரோனா காலத்தில் பிரதமர் நடுத்தர வர்க்கத்தினரிடம் தட்டுகளை ஒலிக்கச் செய்யவும், மொபைல் விளக்குகளை ஒளிரச் செய்யவும் சொன்னபோது, அவர்கள் இதையெல்லாம் செய்தார்கள். ஆனால் இந்த பட்ஜெட்டில் பிரதமர் நரேந்திர மோடி, குறியீட்டு மற்றும் மூலதன ஆதாய வரியை அதிகரித்து நடுத்தர மக்களை தாக்கியுள்ளார் என்றார்.
இதனைத் தொடர்ந்து தமது சமூக வலைதளப் பக்கத்தில், இன்று பாராளுமன்றத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு பிரச்னையை நான் எழுப்பிய போது, இந்த தீவிரமான பிரச்னையை, நிதியமைச்சர் கேலி செய்து சிரித்தார்.
நாட்டின் 90% மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சினைக்கு இப்படி ஒரு புறக்கணிப்பு பதில் பாஜகவின் மனநிலையையும், எண்ணங்களையும், நோக்கங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது.

எந்த விலை கொடுத்தாகிலும் சாதிவாரி கணக்கெடுப்பை உண்மையாக்கி, தாழ்த்தப்பட்டோருக்கு நீதி வழங்குவோம் என்பதை பா.ஜ.க.வுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தியக் கூட்டணி நாட்டின் எக்ஸ்ரேயை வெளிக்கொண்டு வரும் எனப் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி.












Click it and Unblock the Notifications