"20 மாசம் டைம் கொடுங்க.. இதில் அமெரிக்காவுக்கு நிகராக இந்தியா வந்திடும்.." நிதின் கட்கரி ஓபன் சேலஞ்
இந்தியாவின் சாலை உள்கட்டமைப்பு குறித்து நிதின் கட்கரி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
டெல்லி: மத்திய அரசு சார்பில் இப்போது இந்தியாவில் பல்வேறு சாலை மேம்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நிதின் கட்கரி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
எந்தவொரு நாடும் வளர்ச்சியடையப் போக்குவரத்து உள்கட்டமைப்பு மிக முக்கியம். சிறப்பான போக்குவரத்து உள்கட்டமைப்பு இருந்தால் மட்டுமே நகரங்களுக்கு இடையே பொதுமக்கள் எளிதாகப் பயணிக்க முடியும்.
போக்குவரத்து உட்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் மட்டுமே.. ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் சரக்குகளைக் கூட எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இதன் காரணமாக நாட்டில் இருக்கும் அனைத்து பகுதிகளையும் இணைக்கச் சாலை வசதி தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

புதிய சாலைகள்
குறிப்பாக மத்திய நெடுஞ்சாலைத் துறை பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் புதிய நெடுஞ்சாலை மற்றும் எக்ஸ்பிரஸ் சாலைகளை அமைத்து வருகிறது. இதற்கிடையே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, "நமது நாட்டில் முக்கிய நகரங்களை இணைக்க உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதே நமது பிரதமரின் கனவாக உள்ளது. சர்வதேச தரத்தில் உள்கட்டமைப்பை உருவாக்குவதே மத்திய அரசின் முக்கிய பணிகளில் ஒன்றாக இப்போது இருக்கிறது.

அமெரிக்காவுக்கு இணையாக
2024 ஆம் ஆண்டின் இறுதியில், நமது சாலை உள்கட்டமைப்பு அமெரிக்கா சாலை உள்கட்டமைப்புக்குச் சமமாக இருக்கும்.. இதை இலக்காக வைத்தே இப்போது நாங்கள் செயல்பட்டு வருகிறோம். பொருட்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல எவ்வளவு செலவாகிறது என்பது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ரொம்பவே முக்கியம்.. நீங்கள் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடலாம்.. இந்த தளவாடச் செலவு இப்போது இந்தியாவில் 16 சதவிகிதமாக இருக்கிறது.

செலவு
அதேநேரம் சீனாவில் இது 8-10 சதவிகிதமாகவும் ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இது 12 சதவிகிதமாகவும் இருக்கிறது. இதன் காரணமாகவே இப்போது பல முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை ஏற்படுத்தி வருகிறோம்.. தளவாடச் செலவை 9 சதவிகிதத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. இதனால் தான் பெரிய நெடுஞ்சாலைகளை ஏற்படுத்துகிறோம். இதன் மூலம் எரிபொருளையும் நேரத்தையும் மிச்சப்படுத்தலாம்.. இதன் மூலம் செலவும் குறையும்.

நெடுஞ்சாலைகள்
உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக நிதியமைச்சகம் ஏற்கனவே,, 10 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. அதேபோல எனது துறை ரூ.2.7 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.. 2025ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கி.மீ தேசிய நெடுஞ்சாலையை உருவாக்குவதே எங்களது இலக்கு. நான் பொறுப்பேற்ற போது 96,000 கி.மீக்கு மட்டுமே தேசிய நெடுஞ்சாலை இருந்தது. இப்போது அதை 1.46 லட்சம் கி.மீ ஆக உயர்த்தி உள்ளோம். வரும் காலத்தில் 2 லட்சம் கிமீயை எட்டுவோம்.

ஏன் முக்கியம்
முதலீட்டை ஈர்ப்பது மற்றும் தொழில்துறை விரிவாக்கம் இரண்டுமே வறுமையை ஒழிப்பதற்கு அவசியம்.. உலக சந்தையில் இந்தியத் தயாரிப்புகளின் போட்டித்தன்மையை அதிகரிக்க வேண்டும். நமது நாட்டில் உற்பத்தியும் முதலீடுகளும் அதிகரித்தால் மட்டுமே வறுமையை ஒழிக்கும் பாதையில் நம்மால் முன்னேறிச் செல்ல முடியும். இதன் காரணமாகவே போக்குவரத்து உட்கட்டமைப்பை மேம்படுத்தத் தொடர்ச்சியாகப் பல நடவடிக்கைகளை எடுக்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications