விமானத்தில் உடைந்த சீட்.. சக பயணி ஆஃபரை மறுத்து மத்திய அமைச்சர் செய்த செயல்! ‛ஏர் இந்தியா’ மன்னிப்பு
டெல்லி: மத்திய விவசாயத்துறை அமைச்சராக இருக்கும் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு உடைந்த இருக்கையை ஏர் இந்தியா விமான நிறுவனம் ஒதுக்கியது. இதனால் டென்ஷனாகி சிவ்ராஜ் சிங் சவுகான் ஏர் இந்தியாவை கடுமையாக சாடிய நிலையில் அந்த நிறுவனம் அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது பிரதமர் மோடியின் அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக சிவ்ராஜ் சிங் சவுகான் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் டெல்லியில் புஷாவில் கிஷான் மேளாவை தொடங்கி வைக்க சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து டெல்லிக்கு செல்ல ஏர் இந்தியா விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தார்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் AI436 என்ற விமானத்தில் அவர் டிக்கெட் முன்பதிவு செய்தார். அதில் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு 8சி என்ற இருக்கை ஒதுக்கப்பட்டது. அந்த இருக்கை உடைந்து போய் இருந்தது. இதுபற்றி அவர் விமான பணிப்பெண்களிடம் கூறினார். அதற்கு அவர்கள், ‛‛சீட் உடைந்து உள்ளது. அந்த சீட்டுக்கான டிக்கெட்டை விற்பனை செய்ய வேண்டாம் என்று ஏற்கனவே விமான நிறுவனத்திடம் தெரிவித்து விட்டோம்'' என்று கூறினர்.
இதனால் சிவ்ராஜ் சிங் கடும் அதிருப்தியடைந்தார். இதையடுத்து அவரை அடையாளம் கண்ட பயணி ஒருவர் தனது இருக்கையை அவருக்கு வழங்க முன்வந்தார். ஆனால் அதனை சிவ்ராஜ் சிங் சவுகான் மறுத்தார். அதோடு உடைந்த இருக்கையிலேயே ஒன்றரை மணிநேரம் அமர்ந்து அவர் டெல்லியில் இறங்கினார். அதன்பிறகு அவர் சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தை குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார். அதில் காசு வாங்குகிறீர்கள் அல்லவா? அப்படியென்றால் நல்ல இருக்கை வழங்க வேண்டாமா? என்று விளாசி இருந்தார்.
இதையடுத்து அந்த பதிவுக்கு ஏர் இந்தியா நிறுவனம் சார்பில், ‛‛உங்களின் சிரமத்துக்கு வருத்தத்தோடு மன்னிப்பு கோருகிறோம். வரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் அதிக கவனமாக செயல்படுகிறோம்'' என்று கூறியது.












Click it and Unblock the Notifications