நாடாளுமன்றத்தில் வார்த்தை கட்டுப்பாடு! கழுதை கதைக்கூறி மத்திய அரசை சாடிய சு வெங்கடேசன்!
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஊழல், அராஜகம், சர்வாதிகாரம், சகுனி உள்ளிட்ட பல வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் கழுதை கதைக்கூறி மத்திய அரசை சு வெங்கடேசன் எம்பி விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை துவங்கி ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் 24 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரச்சனைகளை எழுப்பி மத்திய பாஜக அரசுக்க சிக்கலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதேநேரத்தில் எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள மத்திய பாஜக அரசும் வியூகம் வகுத்துள்ளது.

பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்
இந்நிலையில் தான் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளின் பட்டியல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் வெட்கக்கேடு, துஷ்பிரயோகம், துரோகம், ஊழல், அராஜகம், சர்வாதிகாரம், சகுனி, ரத்தகளரி, கொரோனா பரப்புவர், துரோகம், அவமானம், குழந்தை தனம், ஏமாற்றுதல், திட்டினார், துரோகம் செய்தார், நாடகம், கபடநாடகம், திறமையற்றவர், அராஜகம் செய்பவர், அழிவு சக்தி, காலிஸ்தானி, மேலும் மோசடிக்காரர், லாலிபாப், பாப்கட், ஒட்டுகேட்பு, வாய்ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, இரட்டை வேடம், பயனற்றது, கொடூரமானவர், ஏமாற்றினார், கோழை, கிரிமினல், ரவுடித்தனம், பொய், உண்மையல்ல, அவமானம், கண்துடைப்பு, கழுதை, முதலை கண்ணீர், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, குண்டர்கள் உள்ளிட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வார்த்தைகளை எம்பிக்கள் பயன்படுத்தினால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட உள்ளது.

சு வெங்கடேசன் எம்பி விமர்சனம்
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்யவிடாமல் தடுப்பதற்காகவே இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது என கூறப்பட்டு இருப்பதாக விமர்சனம் செய்துள்ளன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு வெங்கடேசன் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்காக மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியலை கதைக்கூறி அவர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக சு வெங்கடேசன் எம்பி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

கதைக்கூறி பணி துவக்குகிறேன்
" 17 ஆவது நாடாளுமன்றத்தின் 9 ஆவது கூட்டத்தொடருக்காக மதுரையில் இருந்து புறப்பட்டேன். இத்தொடரில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட சொற்களைக்கொண்ட கதையொன்றை சொல்லி இக்கூட்டதொடருக்கான பணியினை துவக்குகிறேன்'' என தெரிவித்துள்ளார். இந்த கதைக்கு தடை செய்யப்பட்ட சொற்களின் கதை என தலைப்பிட்டு அவர் கூறியுள்ள கதை வருமாறு:

கழுதையை கைது செய்த அதிகாரி
ஒரு கழுதை தனது கஷ்டங்களை நினைத்து கண்ணீரோடு சாலையில் நடந்து போய்க்கொண்டிருந்தது. அதைப்பார்த்த அரசு அதிகாரி ஒருவர் "இந்த கழுதையின் மீது வழக்கு போடுங்கள்" என்று கூறினார். "நான் எந்த தவறும் செய்ய வில்லையே, என் மீது ஏன் வழக்கு போடுகிறீர்கள்?," என கழுதை கேட்டது. அதற்கு அந்த அதிகாரி " நீ அரசுக்கும் அரசருக்கும் எதிரான செயலில் ஈடுபட்டாய்" என்று கூறினார். "இல்லை, நான் நமது அரசர் செய்த ஊழலை பற்றியோ, அவரது மோசடிகளைப் பற்றியோ, நாட்டில் கிரிமினல் பேர்வழிகள் அதிகமாகிவிட்டார்கள் என்றோ, ரவுடித்தனம் செய்யும் குண்டர்கள் அதிகமாகிவிட்டார்கள் என்றோ, அரசரைச் சுற்றி இரட்டைவேடம் போடும் துதிபாடிகள் நிறைந்திருக்கிறார்கள் என்றோ எதுவும் சொல்லவில்லை, என்னை போய் அரசுக்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக எப்படி சொல்கிறீர்கள்?" என்று கேட்டது. "உன் மீது வழக்கு போட்டாகிவிட்டது. இனி நீ எது சொல்வதாக இருந்தாலும் நீதிமன்றத்தில் வந்து சொல்" என்று சொல்லி கழுதையை கைது செய்தனர்.

வழக்கறிஞர் கேள்வி
மறுநாள் நீதிமன்றத்தில் விசாரணை துவங்கியது. கழுதையின் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் கூறினார். அதைக்கேட்டு பதட்டமான கழுதையின் தரப்பு வழக்கறிஞர் கழுதையை பார்த்து கேட்டார் " நீ நமது அரசரை சகுணி என்றோ சர்வாதிகாரி என்றோ தவறாக பேசினாயா?" "இல்லை'',. "நாடகக்காரர் என்றோ பெருமை பீற்றிக் கொள்பவர் என்றோ உண்மையை பேசித்தொலைத்தாயா?", "இல்லை". " நாசசக்தி என்றோ, ரத்தம் குடிப்பவர் என்றோ குற்றம் சாட்டினாயா!" "இல்லை.... எனது வாழ்கை கஷ்டத்தை நினைத்து கண்ணீர் வடித்தபடி நடந்து கொண்டிருந்தேன். நான் வேறெதுவும் செய்யவில்லை" என்றது கழுதை.

முதலை கண்ணீர்
"அரசுக்கு எதிராக எதையும் செய்யாத எனது கட்சிக்காரரைப் பார்த்து எப்படி தேசத்துரோகி என்கிறீர்கள்?" எனக்கேட்டார் வழக்கறிஞர். "நமது அரசர் ஆட்சியில் கண்ணீர் வடிப்பதென்பது அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல் என்று உங்களுக்குத் தெரியாதா?" என கேட்டார் அரசு வழக்கறிஞர். அப்படியொரு சட்டம் இருப்பது அப்பொழுதுதான் கழுதைக்கு நினைவுக்கு வந்ததது. அதை மறந்து பொதுவெளியில் கண்ணீர் வடித்து விட்டோமே என யோசித்த கழுதை, சட்டென சுதாரித்து " நான் உண்மையாக கண்ணீர் வடிக்கவில்லை, போலியாக முதலைகண்ணீர் தான் வடித்தேன்." என நீதிபதியைப் பார்த்து சொன்னது."கண்ணீர் வடிப்பதை விட பெரிய குற்றம் முதலைக்கண்ணீர் வடிப்பது" என்று கூறி சட்டபிரிவை எடுத்து காட்டினார் அரசு வழக்கறிஞர்.
Recommended Video

நான் ஒரு கழுதை
கழுதையின் வழக்கறிஞர் என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார்.கண் கலங்கி ஆனால் கண்ணீர் சிந்த முடியாமல் பாவமாய் நின்ற கழுதையின் முகத்தைப் பார்த்தார் நீதிபதி. சட்டத்தை மீறி கண்ணீர் வடித்த பிரிவில் வழக்குப்போட்டால் சில மாதங்கள் தான் தண்டனை. ஆனால் தேசத்துரோக வழக்கில் காலம் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியிருக்குமே என இரக்கப்பட்ட நீதிபதி அரசு வழக்கறிஞரை பார்த்து, "இந்தக் குற்றத்துக்கு ஏன் தேச துரோக வழக்கு போட்டீர்கள்?" எனக்கேட்டார். அதற்கு அரசு வழக்கறிஞர். கூண்டில் நின்று கொண்டிருந்த கழுதையை பார்த்து "நீ யார்? " எனக்கேட்டார். கண்ணீரையும் துக்கத்தையும் அடக்கிக்கொண்டு சொன்னது "நான் ஒரு கழுதை" என்று. "கழுதை என்பது இந்த நாட்டில் தடைசெய்யப்பட்ட சொல், அதனை நாடாளுமன்றத்திலேயே பயன்படுத்தக் கூடாது. இவரோ அதனை நீதிமன்றத்தில் பயன்படுத்துகிறார். அதனையே தனது பெயர் எனச்சொல்லும் ஒருவர் மீது தேசதுரோக வழக்கு போடாமல் வேறு என்ன வழக்கு போடுவது மை லாட்?" எனக்கேட்டார் அரசு வழக்கறிஞர்." என கதையை முடித்துள்ளார். இந்த கதையில் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என கூறப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்தி மத்திய அரசை சு வெங்கடேசன் எம்பி விமர்சனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications