உ.பி அரசின் அவமான பேனர்.. உங்களை ஆதரிக்க வேண்டும் என எந்த சட்டமும் இல்லை.. சுப்ரீம் கோர்ட்
டெல்லி: சிஏஏ போராட்டக்கார்களின் புகைப்படங்கள் மற்றும் முகவரியை பேனர்களாக வைத்திருப்பதை வைத்திருக்கும் உத்தரப்பிரதேச அரசின் செயலை ஆதரிக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களின் புகைப்படங்கள் பேனர்களாக லக்னோ, ஹஸ்ரத்கஞ் பகுதிகளின் முக்கிய சாலைகளிலும், அம்மாநில சட்டப்பேரவை கட்டடத்தின் முன்பும் வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் உத்தரவின் பேரில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பேனர் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அலகாபாத் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. போராட்டக்காரர்களின் புகைப்படத்தை அச்சிட்டு பேனர் வைத்தது அநியாயத்தின் உச்சம் என்று கூறிய நீதிபதிகள், இது தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் செயல் என உத்தரப்பிரதேச அரசை சாடியது.
நம்பி காத்திருந்த ரசிகர்களுக்கு இதுதானா பரிசு படையப்பா.. காத்துக் காத்து அலுத்துப் போன ரசிகர்கள்!
அத்துடன் அரசின் இந்த செயல் அநியாயத்தின் உச்சம் என்று கூறிய அலகாபாத் உயர்நீதிமன்றம், இதற்காக யோகி ஆதித்யநாத் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. தொடர்ந்து மார்ச் 16ம் தேதிக்குள் பேனர்களை நீக்கி அறிக்கை அளிக்கும் படி தீர்ப்பளித்தது.
இதையடுத்து இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு முறையிட்டது. ஆனால் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இது பற்றி கூறும் போது குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களின் பெயரை பேனர் வைத்து தெரிவிக்கும் உத்தரபிரதேச அரசின் நடவடிக்கையை ஆதரிக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று உத்தரப்பிரதேச அரசிடம் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி பேனர் வைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒரு தடுப்பு நடவடிக்கையாக வைக்கப்பட்டதாகவும் வாதிட்டார். இந்த வழக்கை இந்திய தலைமை நீதிபதி (சி.ஜே.ஐ) எஸ்.ஏ.போப்டே முன் வைக்குமாறு நீதிபதிகள் அமர்வு அறிவுறுத்தியது, இதன் மூலம் அடுத்த வாரம் இந்த வழக்கை விசாரிக்கவும் பரிசீலிக்கவும் வாய்ப்பு உள்ளது. இந்த பேனர் வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.