தேர்தல் மாநிலத்தில் திடீர் ஏற்றம்.. 1300% அதிகரித்த கொரோனா கேஸ்கள்.. உபி-இல் தற்போது என்ன நிலை
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மளமளவென கொரோனா கேஸ்கள் உயரத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகக் குறைந்து வந்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை இப்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலைமை மிக மோசமாக உள்ளது.
இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்திலும் நிலைமை மோசமாகவே உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தேர்தல் சமயத்தில் மோசமான சூழல் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
திருச்சி சிறையில்.. சுதந்திர தியாகி 'நேதாஜி' புத்தகங்களை புரட்டும் ராஜேந்திர பாலாஜி.. பரபர தகவல்
13 மடங்கு அதிகம்
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,695 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் 13 மடங்கு அதிகமாகும். கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்கு வெறும் 552 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது, அதிகபட்சமாகத் தலைநகர் லக்னோவில் 1,115 பேருக்கும் நொய்டா 1,149 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல ஒரு நாளில் 4 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.
என்ன காரணம்
கொரோனா பரிசோதனை விகிதம் அதிகரிக்கப்பட்டதாலேயே கொரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 2.22 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வேகமாகப் பரவி வருவதால் உபி அரசு ஏற்கனவே பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்
ஜனவரி 16 ஆம் தேதி வரை அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. அங்கு இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், 1000க்கும் மேற்பட்ட கேஸ்கள் உள்ள மாவட்டங்களில் ஜிம்கள் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறித்து மூத்த சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்திய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் 15-18 வயதான சிறார்களுக்கு வேக்சின் பணிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்,
2ஆம் அலை
முன்னதாக கடந்த ஆண்டு கொரோனா 2ஆம் அலை ஏற்பட்ட சமயத்தில் உத்தரப் பிரதேசம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது உயிரிழப்புகளும் கட்டுக்கடங்காமல் அதிகரித்தது. அப்போது, கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்களை எரிக்க முடியாமல் அவை கங்கை ஆற்றில் மிதந்தது சென்ற அவலங்களும் நடந்தன.
Recommended Video
பெரும் சவால்
உத்தரப் பிரதேசத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கொரோனா கேஸ்கள் உயரத் தொடங்கியுள்ளது அச்சமூட்டுவதாகவே உள்ளது. அங்கு வெறும் 53 சதவீதம் மட்டுமே 2 டோஸ் வேக்சின் போட்டுக்கொண்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது பெரிய சவாலாக இருக்கும். முன்னதாக கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு வரும் ஜன. 15 வரை நேரடியாகத் தேர்தல் பிரசாரம் நடத்தத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.