தீவிரவாதிகளை அலேக்காக காலி செய்ய பிளான்.. அதிநவீன குண்டுகளை கொள்முதல் செய்கிறது இந்தியா
டெல்லி: 50 கி.மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கி தகர்க்கும் அதிநவீன வெடிகுண்டை, அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளவை எக்ஸ்காலிபர் ரக வெடிகுண்டுகளாகும்.
இந்த வெடிகுண்டை தொலைதூரத்திலிருந்தும் ரிமோட் மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அவசரகால ஆயுத கொள்முதல் நடைமுறைகளின் கீழ், அமெரிக்காவிடமிருந்து எக்ஸ்காலிபர் ரக அதிநவீன பீரங்கி வெடிகுண்டுகளை வாங்க, இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தாலும் கூட, பொதுமக்களுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் அவர்களை மட்டும் குறிவைத்து தாக்க கூடிய அதிநவீன வெடிகுண்டுகளை தான் இந்தியா தற்போது கொள்முதல் செய்ய உள்ளது.
அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்க உள்ள வெடிகுண்டுகளை தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடத்தை இலக்காக குறிவைத்து எக்ஸ்காலிபர் வெடிகுண்டை வீசினால், அவர்கள் பதுங்கியுள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டுமே துளைத்து உள்ளே சென்று வெடிக்கும் தன்மை கொண்டது. இதனால் அப்பகுதியை சுற்றியோ அல்லது குறிப்பிட்ட கட்டிடத்தின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் என ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள் 40 பேர் வீரமரணமடந்தனர். இதற்கு பதிலடியாக அடுத்த சில நாட்களில் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்த, தீவிரவாதிகள் மற்றும் அவர்களது முகாம்கள் அடியாடு அழிக்கப்பட்டன.
புலிகளுக்காக பிரதமராக இருந்த வி.பி.சிங்கிடம் 'ஆயுத உதவி' கேட்டேன்.... வைகோ பரபர தகவல்
இந்தியாவின் இந்த அதிரடி வான்வழி தாக்குதலின் போது, இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட ஸ்பைஸ் 2000 ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. எனினும் இது போன்ற சூழலை கையாள மேலும் அதிநவீன ஆயுதங்கள் தேவைப்படுவதாக ராணுவம் கருதியது.
இதற்கான கோரிக்கை மத்திய அரசிடம் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து எக்ஸ்காலிபர் ரக வெடிகுண்டுகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பதுங்கு குழி அமைத்து பதுங்கியுள்ள தீவிரவாதிகளை, இந்த அதிநவீன வெடிகுண்டுகள் மூலம் எளிதாக வேட்டையாட முடியும் என கூறப்படுகிறது. வெவ்வேறு ஆயுதங்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடத்தை இந்த வெடிகுண்டுகள் மூலம் இலக்காக நிர்ணயிக்கலாம்.
நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளுக்குள் ஊடுருவிச் சென்ற பின்னர் எக்ஸ்காலிபர் ரக வெடிகுண்டுகளை, காற்றில் வெடிக்க செய்ய முடியும். இதனால் இலக்கானது முற்றிலும் அழிக்கப்படும். ஜிபிஎஸ் உதவியுடன் அதிகபட்சம் 57 கிமீ வரை உள்ள இலக்குகளை தாக்கியழிக்க முடியும் என இந்திய ராணுவம் கூறியுள்ளது.
ஆப்கானிஸ்தான் போரில் பீரங்கி குண்டுகளின் துல்லியத்தை மேம்படுத்த எக்ஸ்காலிபர் வெடிகுண்டுகள் அமெரிக்காவால் உருவாக்கப்பட்டன. கடினமான கான்கிரீட் கூரைகளையும் துளைத்து உள் நுழையும் வல்லமை கொண்ட எக்ஸ்காலிபர் குண்டுகள், கூரையை துளைத்து உள் நுழைந்த பின்னரே வெடிக்கும் தன்மை கொண்டது.
இந்நிலையில் எக்ஸ்காலிபர் ரக குண்டுகளை பயன்படுத்த ஏதுவாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம் -777 அல்ட்ரா-லைட் பீரங்கிகளை இந்திய ராணுவத்தில் இணைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது