அமெரிக்காவுக்கான தபால் சேவை அதிரடி ரத்து.. டிரம்பின் அடாவடியால் இந்தியா திடீர் முடிவு! பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்நாட்டுக்கு 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க அமெரிக்காவில் புதிய சுங்கவரி நடைமுறைக்கு வர உள்ளது. இதுவும் நம் நாட்டை பாதிக்க உள்ள நிலையில் அமெரிக்காவுக்கான தபால் சேவையை ஆகஸ்ட் 25ம் தேதி முதல் நிறுத்துவதாக அஞ்சல்துறை அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார். இதில் முதற்கட்டமாக 25 சதவீத வரி கடந்த 7 ம் தேதி அமலுக்கு வந்தது. அடுத்தக்கட்டமாக வரும் 27 ம் தேதி முதல் 25 சதவீத வரி அமலுக்கு வர உள்ளது.

இதுதவிர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு அந்த நாட்டுக்கான அஞ்சல் சேவைக்கான சுங்க கட்டணத்திலும் மாற்றம் செய்துள்ளது. இதுவும் நம் நாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
அதாவது நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பார்சல்களுக்கு இதுவரை விலக்கு அளிக்கப்பட்டதற்கு இப்போது சுங்கக்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உருவாகி உள்ளது. டொனால்ட் டிரம்ப் அரசு கடந்த ஜூலை 30ம் தேதி பிறப்பித்த செயல் உத்தரவு எண் 14324 என்பதன் அடிப்படையில் இந்த சேவை ரத்து செய்யப்பட உள்ளது..
அமெரிக்கா பிறப்பித்த உத்தரவின்படி பிறநாடுகளில் இருந்து வரும் 800 டாலர் வரையிலான பொருட்களுக்கு சுங்க வரி இல்லாமல் இருந்த நிலையில் அதனை அமெரிக்கா மாற்றி வரி விதிப்பதாக அறிவித்தது. அதாவது வரி இல்லாத குறைந்தபட்ச விலக்கு அகற்றப்பட்டுள்ளது. இந்த உத்தரவு காரணமாக தான் அமெரிக்காவுக்கான தபால் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக நம் நாடு அறிவித்துள்ளது.
வரும் 25ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தபால் சேவை கிடையாது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அஞ்சல் துறை வழியாக அமெரிக்காவுக்கு நம் நாட்டில் இருந்து செல்லும் பார்சல் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து அஞ்சல் துறை வெளியிட்ட அறிவிப்பில், 'அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து சர்வதேச அஞ்சல் பொருட்களும், அவற்றின் மதிப்பை பொருட்படுத்தாமல், நாடு சார்ந்த சர்வதேச அவசர பொருளாதார சக்திச் சட்டத்தின் (IEEPA) கட்டண கட்டமைப்பின்படி சுங்க வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கும். இருப்பினும், 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்களுக்கு தொடர்ந்து வரிவிலக்கு அளிக்கப்படும்.
புதிய விதிமுறைகளின் காரணமாக ஆகஸ்ட் 25 க்குப் பிறகு சரக்குகளை ஏற்க முடியாது என்று அமெரிக்காவுக்கு செல்லும் விமான நிறுவனங்கள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளன. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, கடிதங்கள்/ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் தவிர ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பிற அனைத்து வகையான அஞ்சல்சேவை சார்ந்த முன்பதிவுகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நம் நாடு - அமெரிக்கா இடையேயான பார்சல், சரக்கு போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட உள்ளது.
மேலும் ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களின் பொருட்களின் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்படாது. அதற்கு பதிலாக வாடிக்கையாளர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த திடீர் முடிவு மற்றும் நடவடிக்கைக்கு வாடிக்கையாளர்களுக்கு தபால் துறை வருத்தம் தெரிவித்துள்ளது. அதோடு அமெரிக்காவுக்கான தபால் சேவையை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications