பெற்றோர் சம்மதம் தேவை.. லிவ் இன் உறவை பதிவு செய்யாவிட்டால் ஜெயில்! இது உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்
டெல்லி: உத்தரகண்ட் சட்டசபையில் பொது சிவில் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் லிவ் இன் உறவுகள் குறித்து இருக்கும் விஷயங்கள் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் கிரிமினல் வழக்குகளில் நாடு முழுக்க ஒரே சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட்டாலும் சிவில் விவகாரங்களில் ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு சட்டங்களைப் பின்பற்றுகின்றனர்.

இதற்கிடையே நாடு முழுக்க பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று பாஜக வாக்குறுதியாகவே கொடுத்துள்ளது. அதன்படி பாஜக ஆளும் உத்தரகண்ட் சட்டசபையில் இப்போது பொது சிவில் சட்டம் குறித்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
பொது சிவில் சட்டம்: திருமணம், விவாகரத்து, சொத்து மற்றும் வாரிசு சட்டங்கள் தொடர்பான பொது சிவில் சட்டம் உத்தரகண்ட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது எம்எல்ஏக்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" மற்றும் "வந்தேமாதரம்" என கோஷமிட்டனர். இதற்கிடையே இந்த உத்தரகண்ட் பொது சிவில் சட்டத்தில் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் குறித்து இருக்கும் சட்டங்கள் இணையத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது.
அதாவது இந்த புதிய உத்தரகண்ட் பொது சிவில் சட்டப்படி, லிவ்-இன் உறவில் இருப்போர் இதைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.. விதிகளை கடைப்பிடிக்கத் தவறுவோருக்கு ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
விதிகள்: அதேபோல இந்த புதிய சட்டப்படி, 21 வயதிற்கு குறைவாக உள்ளவர்கள் லிவ்-இன் உறவில் இருக்கப் பெற்றோர் ஒப்புதல் தேவை... மேலும் அவர்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் வசிப்பவர்களா இல்லையா என்பதை அறிக்கையாகப் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த புதிய சட்டப்படி லிவ் இன் உறவில் வந்து ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.. அப்படி ஒரு மாதத்தில் பதிவு செய்யப்படவில்லை என்றால் அவர்களுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும். அதேபோல லிவ்-இன் பார்ட்னர்கள் தவறான தகவலை அரசுக்கு வழங்கினால், அவர்கள் மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ. 25,000 அல்லது அதற்கு மேல் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
பராமரிப்பு தொகை கோரலாம்: லிவ்-இன் பார்ட்னர்களின் அறிக்கைகள் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிக்கு அனுப்பப்படும். அவர்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் சரிபார்ப்பார்கள். அது தவறானவை எனத் தெரியவந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து விலகிய பெண் நீதிமன்றத்தை அணுகலாம்.. பராமரிப்பு தொகை குறித்து கோரிக்கை விடுக்கவும் உரிமை இருக்கிறது.
மேலும் லிவ்-இன் உறவில் பிறக்கும் குழந்தைகள் இந்த புதிய விதிகளின்படி அந்த தம்பதியரின் முறையான குழந்தையாக அறிவிக்கப்படும். அதேபோல லிவ்-இன் உறவுகளைப் பதிவு செய்வதில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த லிவ் இன் உறவில் பதிவு செய்வோர் தடை செய்யப்பட்ட உறவில் இருக்கக் கூடாது. தடை செய்யப்பட்ட உறவுகள் என்பது ரத்த உறவுகளைக் குறிக்கிறது.
விலக முடிவு செய்தால்: அவர்களில் ஒருவர் ஏற்கனவே திருமணமானவர் அல்லது லிவ்-இன் உறவில் இருக்கும் போது பதிவு செய்ய முடியாது. மேலும், பார்ட்னர்களில் ஒருவர் மைனராக இருந்தாலும் பதிவு செய்ய முடியாது. அதேபோல பார்ட்னர்களில் ஒருவரை மிரட்டி சம்மதம் வாங்கி இருந்தாலும் அது முடியாது.
அதேபோல லிவ்-இன் உறவை முடித்துக் கொள்ள விரும்பினால், இருவரும் அல்லது இருவரில் ஒருவர் இது தொடர்பாகப் பதிவாளரிடம் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இதற்கான நகலை பார்ட்னருக்கும் வழங்க வேண்டும்.












Click it and Unblock the Notifications