தென் தமிழகத்தின் தலையில் எரிமலையாக இருக்கிறதே கூடங்குளம் அணு உலை.. ராஜ்யசபாவில் 'கொதித்த' வைகோ
டெல்லி: தென் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது கூடங்குளம் அணு உலை; இந்த அணுஉலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் தென் தமிழக மக்களின் கோரிக்கையாகும். அணுமின் நிலையத்தை மூடவும், வரவிருக்கும் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராஜ்யசபாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்பி வலியுறுத்தினார்.
ராஜ்யசபாவில் வைகோ பேசியதாவது: குஜராத் மாநிலத்தில் மிதி-விர்தி கிராமத்திற்கு அருகிலுள்ள பாவ்நகரில் அணுமின் நிலையத்தை நிறுவ ஒன்றிய அரசு ஒரு திட்டம் வகுத்தது. அந்த நேரத்தில், குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி அவர்கள் குஜராத் மாநிலத்தில் அனுமதி தர மறுத்தார். குஜராத் மாநிலம் இந்திய பிரதமருக்கு சொந்த மாநிலம். எனவே, அவர் குஜராத்தில் அணுமின் நிலையத்தை நிறுவ ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

நவம்பர் 22, 1988 அன்று, அப்போதைய சோவியத் ஒன்றிய அதிபர் கோர்பச்சேவ் இந்தியாவிற்கு வருகை தந்துபோது, அப்போதைய இந்திய பிரதமர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓர் அறிக்கை வெளியிட்டு உரையாற்றினார். அதில், இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் இணைந்து, இந்தியாவில் அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறினார்.
ராஜீவ் காந்தியிடம் கேள்வி கேட்ட ஒரே எம்பி நான்
மக்களவையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டபோது யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ராஜ்யசபாவிலும் யாரும் கேள்வி எழுப்பவில்லை. இந்திய பிரதமரிடம் இது குறித்து விளக்கம் கேட்ட ஒரே ஒரு உறுப்பினர் நான்தான். அணுமின் நிலையம் அமைக்க நீங்கள் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. ஆனால் தென் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியான கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள் என்று கூறினேன். இது பற்றி அறிந்ததும் கூடங்குளம் பகுதி பொதுமக்களும், மீனவர்களும் கிளர்ந்தெழுந்தனர்.
உலக அணு உலை பேரழிவுகள்
அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் உள்ள அணு உலையிலும், சோவியத் ரஷ்யாவின் செர்னோபிலிலும் அணு உலை பேரழிவுகள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஜப்பான் புகுஷிமாவில், மார்ச் 11, 2011 அன்று, அணு பேரழிவு ஏற்பட்டு பலர் இறந்தனர். அணுக் கதிர் பாதிப்பால் மக்கள் இன்றும் அவதிப்படுகிறார்கள்.
வரலாற்று சிறப்புமிக்க கூடங்குளம் போராட்டம்
இந்த உண்மைகளை எல்லாம் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால், தென் தமிழ்நாடு முற்றிலுமாக அழிக்கப்படும். கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மீனவ பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் 18 மாதங்கள் போராடினர். நானும் மூன்று முறை அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டேன். போராட்டம் நடத்திய மக்கள் மீது அப்போதைய மாநில அரசால் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் என் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அணுக்கழிவை எங்கே கொட்டுவீர்கள்?
கூடங்குளத்தில் ஏற்கனவே நான்கு அணு உலை அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இரண்டு அலகுகள் அமைக்க முடிவுசெய்துள்ளனர். மேலும் முழுப் பகுதியும் அணு நரகமாக மாறி வருகிறது. பேரழிவு ஏற்பட்டால் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். கற்பனை செய்ய முடியாத அளவு மரணங்கள் நடக்கும். இப்போது எழும் முக்கியமான மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால், அவர்கள் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக எங்கே அப்புறப்படுத்தப் போகிறார்கள்? இப்போது அணுக் கழிவுகள் ஆலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அணுக் கழிவுகளை கடலில் கொட்டப் போகிறார்கள் என்று நான் அச்சப்படுகின்றேன்.
எங்கள் தலைமையில் எரிமலை அமர்ந்திருக்கிறது
ஒரு எரிமலை எங்கள் தலையில் அமர்ந்திருக்கிறது. இதை எதிர்த்துப் போராடும் பூவுலக நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதில். அணுமின் நிலையம் 2018 ஆம் ஆண்டுக்குள் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு (DGR) அமைக்க வேண்டும் என்று கூறியது. அது அமைக்கப்படாததால், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றமானது DGR கட்டுவதற்கு ஏப்ரல் 2022 வரை காலகெடு வழங்கியது. ஆனால் இது வரை அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப் படவில்லை.
கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடுக
கூடங்குளம் அணுமின் நிலையம் தென் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது, இந்த அணுக் கழிவுகளை அணுஉலைக்கு அருகிலுள்ள கடற்கரையைத் தவிர வேறு எங்கும் கொட்டப் போவதில்லை. அணுஉலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் தென் தமிழக மக்களின் கோரிக்கையாகும். அணுமின் நிலையத்தை மூடவும், வரவிருக்கும் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசையும், பிரதமர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு வைகோ பேசினார்.
அணு ஆற்றல் பாதுகாப்பு குறித்து திருமாவளவன் கேள்வி
லோக்சபாவில், அணு ஆற்றலை பாதுகாப்பாக உற்பத்தி செய்திட ஆராய்ச்சிகளை அரசு செய்துள்ளதா?; மின் உற்பத்தியை தவிர வேளாண்மை துறை, உயிரியல், மருத்துவம் உள்ளிட்ட மற்ற துறைகளில் அணு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறதா? ; ஆகிய கேள்விகளை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எழுப்பினார். இதற்கு பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்: அணு ஆற்றல் துறையில் பாதுகாப்புக்காக பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அணு ஆற்றலை வேளாண்மை, உணவு பாதுகாப்பு, மருத்துவம், உயிரியல், நீர் சுத்திகரிப்பு, கழிவு மேலாண்மை, ஹைட்ரஜன் உற்பத்தி, தொழிற்சாலைகளில் இரசாயன பேரழிவு மேலாண்மை ஆகியவற்றில் அணு ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications