முதல் நாளே லோக்சபாவில் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு டோஸ்+நெருக்கடி கொடுத்த விசிக திருமாவளவன்!
டெல்லி: 18-வது லோக்சபா சபாநாயகராக இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஓம் பிர்லாவுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி பேசிய பேச்சு நெருக்கடி கொடுத்தது. லோக்சபாவில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்த போதே மைக் அணைக்கப்பட்டதற்கு எதிராக "இந்தியா" கூட்டணி எம்.பிக்கள் உரத்து முழக்கம் எழுப்ப சலசலப்பு ஏற்பட்டது.
லோக்சபாவில் இன்று புதிய சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. பாஜக அணியின் வேட்பாளர் ஓம் பிர்லா, குரல் வாக்கெடுப்பு மூலமாக வெற்றி பெற்றார். பின்னர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை இருக்கையில் அமர வைத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

பின்னர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக லோக்சபா குழு தலைவர் டிஆர் பாலு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினர்.
இந்த வரிசையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி, ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினார். அப்போது, சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களுக்கு நான் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் இந்தியா கூட்டணியின் சார்பிலும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது இருக்கையின் வலது பக்கத்தில் செங்கோல் உள்ளது. செங்கோல் என்பது அதிகாரத்தின் அடையாளம் அல்ல. யார் பக்கமும் சாயக் கூடாது. நேர்மையாக இருக்க வேண்டும் என்பதற்கான நீதி தவறாமையின் அடையாளமாகும். இந்த இருக்கையின் அழகே நீதி தவறாமைதான்.
கடந்த காலங்களில் மிகச் சிறப்பான சபாநாயகர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். ஆனால் ஆளும் கட்சிக்கு ஒரு சார்பாகவும் எதிர்க்கட்சிக்கு ஒரு வகையாகவும் அணுகியிருக்கிறீர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆளும் கட்சி என்பது வலுவான அதிகாரத்துடன் இருக்கும் கட்சி. ஆகவே சார்புநிலை இருக்கக் கூடாது என்பதையே எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள் (சபாநாயகர் குறுக்கிட்டு அமர சொல்கிறார்)
கடந்த காலத்தில் பல்வேறு பண மசோதாக்கள் உள்ளிட்டவைகளை ஆளும் கட்சி அறிமுகப்படுத்தியது. மசோதாக்களை தீர்மானிக்கும் அதிகாரம் உங்களுக்குதான் இருக்கிறது. அந்த அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்திய ஆளும் கட்சி மீண்டும் அத்தகைய முயற்சியை மேற்கொள்ளலாம். அதற்கு ஒருபோதும் நீங்கள் வளையக் கூடாது என்பது வேண்டுகோள்.
ஒரு மக்களவைத் தலைவர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி (சபாநாயகர் குறுக்கீடு), நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த புரட்சியாளர் அம்பேத்கர், அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் உள்ளிட்டோரின் சிலைகள் ஒரு ஓரமாய் கொண்டு போய் (மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது)... பின்னரும் திருமாவளவன் தொடர்ந்து பேசினார். அப்போது இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications