"மாபெரும் தவறு.. அரசு காஷ்மீர் மக்களுக்கு செய்துள்ளது நம்பிக்கை துரோகம்.." மக்களவையில் திருமாவளவன்
டெல்லி: காஷ்மீர் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய விசிக எம்பி திருமாவளவன், ஜம்மு- காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது மிகப் பெரிய தவறு என்றும் அங்கு இன்னும் ராணுவ ஆட்சியே நீடிக்கிறது என்றும் சாடியுள்ளார்.
மத்திய அரசின் 2022 - 23 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1இல் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து கடந்த மாதம் 11ஆம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நிறைவடைந்தது.

இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 14) தொடங்கியது. இதில் ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
ரூ.1.42 லட்சம் கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கை, துணை மானியக் கோரிக்கைகளையும் கூடுதல் மானியக் கோரிக்கைகளையும் நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.
அதன் பின்னர் பட்ஜெட் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது அப்போது பேசிய விசிக எம்பி திருமாவளவன், "ஜம்மு- காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது மிகப் பெரிய தவறு. அங்கு இன்னும் ராணுவ ஆட்சியே நீடிக்கிறது.
இந்த அரசு "ஒரே தேசம் ஒரே கலாச்சாரம்" என்னும் கனவுத் திட்டத்தை நிறைவேற்றவே ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக உடைத்துச் சிதறடித்துள்ளது. இது அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி.
பாகிஸ்தான் நாட்டுடன் இணையாமல் நம்மோடு இணைந்த காஷ்மீர் மக்களுக்கு செய்த நம்பிக்கைத் துரோகம். இது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரான ஜனநாயகப் படுகொலை. அங்கு இன்னும் இயல்வு நிலை திரும்பாத நிலையில், அப்படியொரு தோற்றத்தை உருவாக்க முயல்வதை கைவிட வேண்டும்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளடக்கிய நாடாளுமன்ற குழுவை அங்கு பார்வையிட அனுப்ப வேண்டும். மேலும், அங்குள்ள மக்கள் அவர்களின் விருப்பப்படி அரசு முடிவெடுக்க வேண்டும். மீண்டும் காஷ்மீரை மாநிலமாக அறிவிக்க வேண்டும்" என்று பேசினார்.












Click it and Unblock the Notifications