மிஸ்டர்.. சேருக்கே சேலஞ்ச் பண்றீங்க! மாறிய துணை ஜனாதிபதி முகம் -திரிணாமூல் எம்பி டெரிக்கிடம் டென்சன்
டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை விவாதிக்க வலியுறுத்தி தொடர்ந்து முழக்கம் எழுப்பிய திரிணாமூல் எம்பி டெரிக் ஓ பிரையன் செயலால் கோபமடைந்த துணை ஜனாதிபதி அவரை சத்தம்போட்டு கண்டித்து அவையை ஒத்தி வைத்தார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரில் முதல் நாளிலேயே மணிப்பூரில் குகி பழங்குடி பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட வீடியோ தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக பேசுவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்.பிக்க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆனால், பிரதமர் நரேந்திர மோடி இந்த வீடியோ தொடர்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர், "மணிப்பூரில் நடந்த சம்பவம் வெட்கக்கேடானது. என் இதயம் இதனால் கோபத்தில் நிரம்பி வலிக்கிறது. எந்த குற்றவாளியும் தப்பிக்கமாட்டார்கள் என்று நான் உறுதி அளிக்கிறேன். முழு வலிமையுடன் சட்டம் தனது கடமையை செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்த இந்த சம்பவத்தை மன்னிக்க முடியாது." என்று கூறி இருக்கிறார்.

இதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கண்டன முழக்கங்களை எழுப்பியதால் இரு அவைகளும் மறுநாள் காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. வெள்ளிக்கிழமையும் மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினார்கள்.
2 நாட்கள் அமளியுடன் நடைபெற்ற நாடாளுமன்ற இரு அவைகளும், வார விடுமுறை முடிந்து இன்று மீண்டும் கூடியது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் முன்னிலையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பேச வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறுபக்கம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டி தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். கடந்த வியாழக்கிழமை மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் ஆவேசமாக பேசிய திரிணாமூல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் இன்றும் தொடர்ந்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது ராஜ்யசபா அவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் அவை நடவடிக்கைகள் குறித்தும் எம்பிக்களின் நோட்டீஸ் பற்றியும் அறிவித்துக்கொண்டு இருந்தபோது டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்பிக்கள் தொடர்ந்து சத்தமாக முழக்கங்களை எழுப்பியவாரு இருந்தனர்.
இதனால் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீன் தன்கர் திடீரென ஆவேசமானார். கோபத்தில் அவரது முகம் மாறியது. டெரிக் ஓ பிரையனிடம் "இருக்கையில் அமருங்கள். நீங்கள் நாற்காலிக்கே சவால் விடுகிறீர்கள்." என்று ஆவேசமாக தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் மாநிலங்களவையை 12 மணி வரை ஒத்தி வைப்பதாக அவர் அறிவித்தார்.
இதேபோல், நாடாளுமன்ற மக்களவையிலும் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக லோக் சபாவில் பேச அனுமதிக்கப்படும் என்று அறிவித்தார்.
இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி இது பற்றி பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களை சமாதானப்படுத்த முயன்றும் அமளி குறையவில்லை. இதனை தொடர்ந்து மக்களவையும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications