கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் முழு விவரம் வெளியானது.. முக்கிய அம்சங்கள்
டெல்லி: விஜய்யின் கரூர் வேலுச்சாமிபுரம் பிரசாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பின் முழு விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இதில் என்னென்ன முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது என்பதனை இங்கு பார்க்கலாம்.
கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு (SIT) விசாரணை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தமிழக வெற்றிக் கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்தும், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சி.பி.ஐ. விசாரணை கோரி பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினராலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
தீர்ப்பில், தமிழக அரசு அமைத்த எஸ்.ஐ.டி. மற்றும் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணையை ரத்து செய்துள்ளது. "கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடுகிறோம். சி.பி.ஐ. நடத்தும் விசாரணையை கண்காணிப்பதற்காக, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இந்த குழுவில் 2 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இருப்பார்கள்.
தீர்ப்பின் முழு விவரம்
இந்த குழுவில் உள்ள 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தமிழ்நாட்டில் பணியாற்றுபவர்கள் ஆக இருக்கலாம்; ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்து, மாதம் தோறும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்," என்று உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவின் முழு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில், காவல் உயர் அதிகாரிகளின் பத்திரிகையாளர் சந்திப்பும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதாவது, ஊடகங்கள் மத்தியில் தமிழக காவல் அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள், மாநில அரசின் சிறப்பு புலனாய்வு குழு பாரபட்சமின்றி செயல்படுமா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
வேறு கட்சிக்கு அனுமதி மறுப்பு
எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுகிறோம் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழக வெற்றிக் கழகம் கரூர் வேலுசாமிபுரத்தில் நடத்திய பிரசார நிகழ்ச்சிக்கு 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வேறு ஒரு கட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு செலவில்
சி.பி.ஐ. விசாரணையை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவிற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு அவர்களது செலவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருதரப்பினருக்கும் இடையேயான சண்டையை பார்த்துதான் பாரபட்சம் இல்லாத விசாரணையை பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்கிறார்கள்.
மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க
கரூரில் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை நாடு முழுவதும் மக்களின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. குற்றவியல் நீதி அமைப்பில் விசாரணை செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டியது அவசியம். அதை மீட்டெடுக்கும் ஒரு வழி என்னவென்றால், முற்றிலும் சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணை இருப்பதை உறுதி செய்வதாகும்.
சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்
கரூர் டவுன் காவல் நிலையத்தின் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆய்வாளர், தனி நீதிபதியின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, மற்றும் மாண்புமிகு முதலமைச்சரால் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஆகியவை, முதல் தகவல் அறிக்கை மற்றும் இதுவரை சேகரிக்கப்பட்ட மற்ற அனைத்து ஆவணங்கள், டிஜிட்டல் அல்லது பிற ஆதாரங்களை, மேலும் விசாரணைக்காக உடனடியாக சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதைக் கருத்தில் கொண்டு, சிறப்புப் புலனாய்வுக் குழு அல்லது ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைப்பதற்கான உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது. அதாவது, அவை செயல்பட வேண்டியதில்லை. இதுபோன்ற விஷயங்கள் தீர்ப்பில் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications