தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்த்.. பிரதமர் நரேந்திர மோடி உருக்கமான இரங்கல்
டெல்லி: விஜயகாந்த் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது, தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்த், அவரது நடிப்பு பல லட்சம் மக்களின் இதயங்களைக் கவர்ந்தது, தமிழ்நாட்டின் அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிகிச்சை பெற்றபடி வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். விஜயகாந்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக, அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது. வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 18-ம் தேதி சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. நுரையீரல் நிபுணர்கள் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து, உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் இருந்து கடந்த டிசம்பர் 12-ம் தேதி தான் விஜயகாந்த் வீடு திரும்பி இருந்தார் .
கடந்த செவ்வாய்க்கிழமை விஜயகாந்த் மருத்தவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று (டிச.28) காலை விஜயகாந்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் உயிரிழந்தார். விஜயகாந்த் மறைவால் சென்னை வளசரவாக்கத்தில் அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியிலும் தேமுதிக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டுள்ளனர். அவர்கள் கதறி அழுகிறார்கள். அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
மத்திய இணையமைச்சர் எல் முருகன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "தேமுதிக-வின் நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் திரையுலகிலும், அரசியலிலும் பெரும் ஆளுமையான, கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது; பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர்; விஜயகாந்தை இழந்துவாடும், குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்; அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில், "திரையுலகம் மட்டுமல்லாது தமிழக அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி அடையாளத்தை பதித்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது; சாமானியனாக சினிமாவுக்குள் நுழைந்து தன் புரட்சிகரமான கருத்துக்கள் மூலம் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்ததோடு, தமிழக அரசியலிலும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கே மிகப்பெரிய இழப்பு ஆகும்; இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே எனும் முழக்கத்தை முன்னிறுத்தி நடிகராக, நடிகர் சங்கத்தலைவராக, அரசியல்வாதியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக, ஏழை, எளிய மக்களுக்கு உதவும் மனிதாபிமானம் கொண்டவராக கேப்டன் விஜயகாந்த் ஆற்றிய பணிகள் என்றென்றும் தமிழக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்; தமிழ் மீதும் தமிழக மக்கள் மீதும் அதீத பற்று கொண்டிருந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினர், திரையுலகத்தினர், ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என கூறியுள்ளளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட இரங்கல் செய்தியில், "தேமுதிக தலைவர், மதிப்பிற்குரிய கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி, மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அளிக்கிறது; தென்தமிழகத்தில் பிறந்து, தென்னிந்தியத் திரையுலகையே கட்டியாண்ட பெருமைக்குரியவர்; ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதர்; உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பேரன்பைப் பெற்ற அற்புதமான கலைஞர்; தன்னலமற்ற தலைவர், தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்டவர்; கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்; சொல்லொன்று செயலொன்று என்றில்லாது, சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர். பாரதப் பிரதமர் பேரன்பைப் பெற்றவர்; கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்; விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தேமுதிக தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும், தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அவரது ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய, இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்"- இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்..
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தமிழ் திரையுலகின் ஜாம்பவான், அவரது அற்புதமான நடிப்பு கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை நீங்கா இடம் பிடிக்க வைத்தது. ஒரு அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொதுசேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது மறைவு பொதுச்சேவையில் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை நிரப்பவது கடினமாகும். விஜயகாந்த் என்னுடைய மிக நெருங்கிய நண்பராக இருந்தார், பல ஆண்டுகளாக அவருடன் தொடர்பில் இருந்ததை இந்த நேரத்தில் பாசத்துடன் நினைவுகூறுகிறேன் . இந்த சோகமான நேரத்தில், என் எண்ணம் முழுவதும் அவரது குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் அவரை பின்தொடர்பவர்களை பற்றித்தான் இருக்கிறது. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications