34-வது வெளியுறவுத் துறை செயலாளராக வினய் மோகன் குவாத்ரா இன்று பதவியேற்பு- நேபாள தூதராக நவீன்!
டெல்லி: நாட்டின் 34-வது வெளியுறவுத் துறை செயலாளராக வினய் மோகன் குவாத்ரா இன்று பதவியேற்கிறார். இதையடுத்து வினய் மோகன் குவாத்ராவுக்கு பதிலாக நேபாளத்துக்கான புதிய இந்திய தூதராக நவீன் ஶ்ரீவத்சவா நியமிக்கபடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் வெளியுறவுத் துறை செயலாராக பணியாற்றிய ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதனையடுத்து வினய் மோகன் குவாத்ரா இன்று புதிய வெளியுறவுத் துறை செயலாளராகப் பொறுப்பேற்கிறார். நேபாளத்துக்கான இந்திய தூதராகப் பணியாற்றி வந்தார் வினய் மோகன்.

1965-ம் ஆண்டு பிறந்த வினய் மோகன் குவாத்ரா, கடந்த 1988-ல் நாட்டின் வெளியுறவுத்துறை பணியில் இணைந்தார். 1993-ம் ஆண்டு ஜெனீவாவில் ஐ.நா.வுக்கான இந்திய டீமில் 3-ம் நிலை செயலாளராகப் பணியாற்றினார். 2003-ல் சீனா தலைநகர் பெய்ஜிங்கில் இந்திய தூதரகத்தில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2006-ல் பெய்ஜிங், இந்திய தூதரகத்தின் துணைத் தலைவரானார்.
2006-2010-ல் சார்க் அமைப்பின் இந்திய பிரதிநிதியாக நேபாளம் நாட்டில் பணியாற்றினார். 2013 முதல் 2015-ம் ஆண்டு வரை இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அமெரிக்க விவகாரங்கள் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டார். 2017 முதல் 2020 வரை பிரான்ஸுக்கான இந்திய தூதராகவும் 2020 முதல் நேபாளத்துக்கான இந்திய தூதராகவும் வினய் மோகன் பணியாற்றினார். 2020 முதல் இந்தியா-நேபாளம் இடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை வினய் மோகன் குவாத்ரா வெற்றிகரமாக கையாண்டார். இதனைத் தொடர்ந்து இன்று நாட்டின் 34-வது வெளியுறவுத் துறை செயலாளராகப் பதவி ஏற்கிறார் வினய் மோகன் குவாத்ரா.
இதனைத் தொடர்ந்து நேபாளத்துக்கான இந்திய தூதராக நவீன் ஶ்ரீவத்சவா நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. 1993 ஐ.எப்.எஸ். பேட்ச் அதிகாரி நவீன் ஶ்ரீவத்சவா. இவர் சீனா விவகாரங்களை ராஜதந்திரமாக கையாள்வதில் வல்லவர் என்கின்றன வெளியுறவுத்துறை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications