முழுக்க முழுக்க அரசியல் மட்டும்தான்.. பி.டி.உஷா மீது வினேஷ் போகத்.. பகீர் குற்றச்சாட்டு
டெல்லி: பாரிஸில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பி.டி. உஷா தன்னைச் சந்தித்தபோது அனுமதி இல்லாமல் புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும், தனக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் நடிக்க மட்டுமே செய்தார். இது முழுக்க முழுக்க அரசியல் மட்டுமே என்று வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.
பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 53 கிலோ பிரிவு மல்யுத்தப் போட்டியில் கலந்துகொண்ட ஹரியானா மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அதிக எடையுடன் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் வாய்ப்பை நூலிழையில் இழந்தார். இச்சம்பவம் அனைத்து தரப்பினரது மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு ஆதரவு கரம் நீண்டன.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத்துக்கு உடல்நலக் குறைவு காரணமாக பாரீஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, வினேஷ் போகத்தை இந்திய தடகளச் சங்கத் தலைவர் பி.டி.உஷா சந்தித்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். அச்சமயத்தில், வினேஷ் போகத்துடன் இருக்கும் புகைப்படத்தை பி.டி.உஷா வெளியிட்டிருந்தார்.
அக்டோபர் மாதம் 5ம் தேதி ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா திரும்பிய வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். வினேஷ் போகத், ஜூலானா சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் இறங்கி பிரசாரத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில், பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாரீஸில் நடந்த சம்பவம் தொடர்பாக பேட்டி அளித்துள்ள வினேஷ் போகத் கூறியுள்ளதாவது: பாரிஸீல் எனக்கு எந்தவகையிலான ஆதரவு கிடைத்தது என்று எனக்குத் தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது என்னைச் சந்திக்க வந்த பி.டி.உஷா எனது அனுமதியின்றி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அரசியலில் பூட்டிய கதவுக்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதேபோலத்தான் பாரீஸிலும் அரசியல்தான் நடந்தது. இதனால், மனதளவில் நான் மிகவும் உடைந்து பேனேன். மல்யுத்தத்தை கைவிட வேண்டாம் என்று பலரும் கூறினர். எதற்காக மல்யுத்தத்தை நான் தொடர வேண்டும். எல்லா இடங்களிலும் அரசியல் உள்ளது. நான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது வெளியில் என்ன நடந்ததென்று எனக்குத் தெரியவில்லை.
வாழ்வில் மிகவும் கடினமான கட்டத்தை நான் கடந்து கொண்டிருந்தேன். அப்போது, பி.டி.உஷா எனக்கு ஆதரவு தருவதுபோல என் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுத்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து நான் உங்களுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்றுதான் ஒருவர் ஆதரவு தருவார்களா. இது முழுக்க முழுக்க அரசியல். முறையான நடவடிக்கை இல்லை. வெறும் நடிப்பு என்று தெரிவித்துள்ளார்.
பாஜக நிர்வாகியும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் தொடர்ந்து வினேஷ் போகத்தை விமர்சித்து வருகிறார். இதற்கு வினேஷ் போகத்தும் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறார். ஹரியானா அரசியலில் இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. பொதுவாக ஹரியானா மாநிலத்தில் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு அதிகம். இதனால் பிரஜ் பூஷண் சரண் சிங்குக்கு கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
பிரிஜ் பூஷண் சிங்கின் செயல் தங்களுக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா குறித்து எதுவும் பேச வேண்டாம் என்று பிரஜ் பூஷணுக்கு பாஜக தலைமை அறிவுறுத்தியது. ஆனாலும், பிரிஜ் பூஷண் சிங் அதை கேட்கவில்லை. வினேஷ் போகத்தை அவர் மீண்டும் விமர்சித்து வருகிறார்.
இதுகுறித்து பிரிஜ் பூஷண், வினேஷ் போகத் கில்லாடி பெண். ஒட்டு மொத்த சிஸ்டத்தையும் ஹைஜேக் செய்வது எப்படி என்று அவருக்கு தெரியும். அதனால் காங்கிரஸ் அவரை ஹரியானாவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். நான் உங்களிடம் தவறாக நடந்திருந்தால், அப்போதே என் கன்னத்தில் அறைந்திருக்கலாமே. காங்கிரஸில் இணைவதற்கு தான் இவ்வளவு நாடகமும் நடத்தினீர்களா என்று மக்கள் கேட்கின்றனர். என் மீதான புகார் தவறு என்று நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications