மது போதை... ரன்வே விளக்குகள் சேதம்... 3 விமானிகள் அதிரடியாக சஸ்பெண்ட்
டெல்லி: பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக, மூன்று விமானிகளை பணியிடை நீக்கம் செய்து சிவில் விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு விமானி 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தைச் சேர்ந்தவர். மற்ற இருவர் 'ஸ்பைஸ்ஜெட்' தனியார் விமான நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ரன்வே எட்ஜ் விளக்குகளை சேதப்படுத்தியதால், இரண்டு ஸ்பைஸ்ஜெட் விமானிகள் ஆறு மாதங்களுக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விமானிகள் ஆரத்தி குணசேகரன் மற்றும் சரப் குலியா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜூலை 2 ம் தேதி புனேவில் இருந்து கொல்கத்தா வந்து இறங்கிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், சுமார் 1,300 அடிக்கு கீழே, விமானம் ரன்வேயை தொட்டது கண்டறியப்பட்டது. இதன் விளைவாக விமானம் ரன்வேயின் சென்டர்லைன் வலதுபுறமாகச் சென்று, எட்ஜ் விளக்குகளை சேதப்படுத்தியது. இருப்பினும், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதே நேரம், ஆல்கஹால் தொடர்பான சுவாசப் பரிசோதனையில் தோல்வியுற்ற விமானியை ஏர் இந்தியா நிறுவனம் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது. நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகமிருந்ததால் விமானி ஒருவர் கூடுதலாக காக்பிட் பணிக்குழுவில் சேர அழைக்கப்பட்டார்.
அப்போது விமானம் புறப்படுவதற்கு முன்பாக மேற்கொள்ள வேண்டிய சுவாசப் பரிசோதனையில் அவரது மூச்சுக்காற்றில் ஆல்கஹால் அளவு அதிகமிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு 3 மாத பணியிடை நீக்கம் தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications