ஆம்புலன்சுக்கு வழி விடாவிட்டால் ரூ.10,000, டிராபிக் விதிமீறல்களுக்கு அபராதம் பல மடங்கு அதிகமாகிறது
டெல்லி: ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு, ரூ .10,000 அபராதம் விதிக்க பரிந்துரைக்கும் மோட்டார் வாகனங்கள் (திருத்த) மசோதாவுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மாநிலங்களவையில் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்த இந்த மசோதா 16வது லோக்சபா காலம் முடிவடைந்தததால், காலாவதியானது. எனவே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது மீண்டும், லோக்சபாவில் அறிமுகம் செய்யப்படும்.
சிறார் வாகனம் ஓட்டுதல், உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிக வேகம் மற்றும் அதிக சுமை போன்ற போக்கு வரத்து குற்றங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வழி செய்யும் வகையில் இந்த சட்டத் திருத்தம் உள்ளது.
18 மாநிலங்கள் அறிவுறுத்தல்
சட்டம் நிறைவேறினால், அவசரகால வாகனங்களுக்கு வழிவிடாவிட்டால், ரூ .10,000 அபராதம் விதிக்க முடியும். ஓட்டுநர் உரிமங்களை மீறும் வாகன ஒப்பந்ததாரர்களுக்கு மசோதாவில் உள்ள விதிகளின்படி ரூ .1 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியுமாம். இந்த கெடுபிடிகள், 18 மாநிலங்களைச் சேர்ந்த போக்குவரத்து அமைச்சர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற நிலைக்குழுவாலும் இவை ஆராயப்பட்டு ஒப்புதல் தரப்பட்டது.
அதிகரித்துள்ள அபராதங்கள்
அதிக வேகத்தில் வாகனம் இயக்கினால், ரூ .1,000 முதல் 2,000 வரையில் அபராதங்கள், காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ .2,000 அபராதம், ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ .1,000 அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தை 3 மாத இடைநீக்கம் செய்யலாம். சிறுவர்கள் சாலை விபத்து ஏற்படுத்தினால், அவர்களின் பாதுகாவலர் / பெற்றோர் குற்றவாளி எனக் கருதப்படுவார். 3 வருடங்கள் சிறை தண்டனை, ரூ.25 ஆயிரம் அபாரதம் போன்றவற்றோடு, வாகனத்தின் பதிவுவும் கூட ரத்து செய்யப்படும் என்று சொல்கிறது இந்த சட்டம்.
லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டாதீர்கள்
போக்குவரத்து மீறல்களுக்கு இப்போது குறைந்தபட்ச அபராதம் ரூ.100 என உள்ளது. அது ரூ .500 அபராதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் உத்தரவுகளை மீறினால் இதுவரை ரூ .500 அபராதம். இனிமேல் குறைந்தபட்சம் ரூ .2,000 அபராதம். உரிமம் இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் அதற்கு அபராதம் ரூ .5 ஆயிரம் என இந்த சட்டம் சொல்கிறது. லைசென்சை தகுதி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் வாகனம் ஓட்டினால், அவர்களுக்கு, ரூ .10,000 அபராதம் விதிக்கப்படும். ஆபத்து விளைவிக்கும் வகையில், வாகனம் ஓட்டுவதற்கான அபராதம் ரூ .1,000த்திலிருந்து ரூ .5,000 ஆக உயர்த்தப்படும். புதிய சட்டத்தின் கீழ் குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ .10,000 அபராதம் விதிக்கப்படும்.
சீட் பெல்ட், ஹெல்மெட்
வாகனங்களில் அதிக சுமை ஏற்றினால் ரூ .20,000 அபராதம் விதிக்கப்படும். சீட் பெல்ட் அணியாதவர்களுக்கு ரூ .1,000 அபராதம் மற்றும் இரு சக்கர வாகனங்களை ஓட்டும் போது ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ .1,000 அபராதம் விதிக்கப்படும், அதே நேரத்தில் அவர்களின் உரிமங்கள் மூன்று மாதங்களுக்கு தகுதி நீக்கம் செய்யப்படும்.
தேர்வு கமிட்டி
மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) மசோதாவை எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது, என்று, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே தெரிவித்திருந்தார். எனவே, இந்த கூட்டத்தொடரில் சட்டம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளது. லோக்சபாவால் நிறைவேற்றப்பட்ட மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) மசோதா, 2017, ஏப்ரலில் ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அது நாடாளுமன்ற தேர்வு கமிட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேர்வு கமிட்டி பரிந்துரையையும் உள்ளடக்கி, இந்த மசோதா மாநிலங்களவையில் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த மசோதா நிறைவேற்றப்படும் முன்பாக, 16வது லோக்சபா பதவிக்காலம் நிறைவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.