மோடி முன்னிலையில்.. சத்தீஸ்கர் முதலமைச்சராக பதவியேற்றார் விஷ்ணு தியோ! துணை முதல்வர்களும் பதவியேற்பு
டெல்லி: சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக விஷ்ணு தியோ சாயும் துணை முதலமைச்சராக அருண் சாவோவும் பதவியேற்றுக்கொண்டார்கள்.
பாஜக வெற்றிபெற்ற ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நீண்ட இழுபறிக்கு பிறகு முதலமைச்சர்கள் யார் என்று பாஜக தலைமை அறிவித்தது. ராஜஸ்தானின் முதலமைச்சராக பஜன்லால் சர்மாவும், மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராக மோகன் யாதவும், விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கரின் முதலமைச்சராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர், மத்திய பிரதேச முதலமைச்சர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், ராஜஸ்தான் முதலமைச்சர் பிராமண சமூகத்தை சேர்ந்தவர்.

இந்த நிலையில் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர்களின் பதவியேற்பு விழாக்கள் நடைபெற்றன. முதலில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் சத்தீஸ்கர் முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஹரிசந்தன் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அவரை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில துணை முதலமைச்சர்களாக விஜய் ஷர்மா மற்றும் அருண் சாவோ ஆகியோரும் பதவியேற்றுக் கொண்டார்கள்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் முதலமைச்சர் விஷ்ணு தேவ் சாய் ஆர்.எஸ்.எஸ். கொள்கையில் பிடிமானம் கொண்டவர். அவர் சத்தீஸ்கரின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட பிறகு, முதலில் அம்மாநில ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்குதான் சென்றார். ஆர்.எஸ்.எஸ். மீதான தீவிரமான கருத்தியல் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வருகிறார். சத்தீஸ்கரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒரு அங்கமாகவே சாய் பார்க்கப்படுகிறார்.
இவர் சத்தீஸ்கரில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய பழங்குடியின மக்களை மீண்டும் இந்து மதத்திற்கு மாற்றும் கர் வாப்ஸி திட்டத்தை கையில் எடுத்ததால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைமையின் நம்பிக்கையை பெற்று இருந்தார். சத்தீஸ்கரில் மதமாற்றத்தைத் தடுக்க, ஆர்.எஸ்.எஸ். மதமாற்ற தடை சட்டத்தையும் ஆதரித்தது. ஆனால் அம்மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் ராமன் சிங் அரசு வளர்ச்சியை மட்டுமே தேர்தல் வியூகமாக கருதி அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. எனவே அவர் இம்முறை ஓரம்கட்டப்பட்டு விஷ்ணு தியோ முதலமைச்சராகி உள்ளார்.












Click it and Unblock the Notifications