வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்.. லோக்சபாவில் 3 மசோதாக்கள் மீது இன்று மாலை வாக்கெடுப்பு.. நிறைவேறுமா?
டெல்லி: லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட 3 மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 4 மணிக்கு லோக்சபாவில் நடைபெறுகிறது. இந்த மசோதாக்களை நிறைவேற்ற 3-ல் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம் என்பதால், இந்த மசோதாவை மத்திய அரசால் நிறைவேற்ற முடியுமா? என்ற எதிர்பார்ப்பு எழும்பியுள்ளது.
தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்டவற்றை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று கூடியது. மூன்று நாட்களாக இந்த சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

3 மசோதாக்கள் மீதான விவாதம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா யூனியன் பிரதேசங்களின் சட்ட திருத்த மசோதாவை முன்மொழிந்தார். சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் அரசியலமைப்பு (131வது பிரிவு) மசோதா மற்றும் தொகுதிதிகள் மறுவரையறை மசோதாக்களை முன்மொழிந்தார். மகளிருக்கான இட ஒதுக்கீட்டை செயல்படுத்த லோக்சபாவில் உள்ள தற்போதுள்ள இடங்களுடன் கூடுதல் மொத்த இடங்கள் எண்ணிக்கையை 50 சதவிகிதம் அதிகரிக்க வேண்டியிருக்கும்.
அவையின் பலம் 850 ஆக இருக்கும். இதில் 272 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இதனால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றார். இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்ற நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக எம்பி டிஆர்பாலு பேசுகையில், இந்த மசோதாவை சாண்ட்விச் மசோதா என அழைக்கலாம். ஏனென்றால் இதில் உள்ள அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளன.
தனித்தனியாக வைக்கப்பட்டு இருக்கிறதா? என்பதை அரசாங்கம் பார்க்கவில்லை. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ஏற்கனவே உள்ளது" என்றார். இந்த மசோதா மீதான விவாதம் அவையில் காரசாரமாக நடைபெற்றது. இன்றும் மசோதா மீதான விவாதம் தொடரும் என சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். விவாதம் முடிந்ததும் இன்று மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறும் என்றார்.
பெரும்பான்மை உள்ளதா?
நாட்டில் மொத்த லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கை 543. இப்போது 3 இடங்கள் காலியாக உள்ளன. இதனால் 540 எம்பிக்கள் உள்ளனர். இதில் 3ல் 2பகுதி என்பது 360 எம்பிக்கள். எனவே லோக்சபாவில் இந்த மசோதாவை நிறைவேற்ற 360 எம்பிக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 292 எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். 68 எம்பிக்கள் குறைவாக உள்ளனர்.
அதேபோல் ராஜ்யசபாவில் மொத்தம் உள்ள 250 இடங்களில் 5இடங்கள் காலியாக உள்ளன. 245 பேர் மட்டுமே ராஜ்யசபா எம்பிக்களாக உள்ளனர். அரசியல் சாசன சட்ட மசோதாவை நிறைவேற்ற 3ல் 2 பங்கு என்றால் 163 எம்பிக்கள் தேவை. ஆனால் பாஜக மற்றும் பாஜக கூட்டணிக்கு ராஜ்யசபாவில் 138 எம்பிக்கள் மட்டுமே உள்ளன. இதனால் பிற கட்சிகளை சேர்ந்த 25 எம்பிக்களின் ஆதரவு பாஜகவுக்கு தேவையாக உள்ளது. இதனால் இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் வாக்கெடுப்பில் மசோதாவிற்கு மெஜாரிட்டி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications