புதிய நாடாளுமன்றத்தை அலங்கரிக்க போகும் மாதிரி செங்கோலை தயாரித்தது யார்? நந்தி சிலை எதற்கு?
டெல்லி: டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவை தலைவரின் இருக்கைக்கு அருகே சோழர் கால செங்கோலை பிரதமர் மோடி நிறுவவுள்ளது எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியம் என அதை தயாரித்த உம்மிடி குடும்பத்தினர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்கள்.
டெல்லியில் ரூ 970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டடம் வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடியால் திறக்கப்படுகிறது. பொதுவாக இந்த கட்டடத்தை ஜனாதிபதிதான் திறக்க வேண்டும், அதுதான் மரபு. ஆனால் இந்த கட்டடத்தை பிரதமர் மோடியே திறப்பதால் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் இந்த கட்டடத் திறப்பு விழாவுக்கு வரமாட்டோம் என 19 எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. இது ஒரு புறம் இருக்க, இந்த விழாவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சோழர் கால மாதிரி செங்கோலை மக்களவைத் தலைவரின் இருக்கைக்கு அருகே பிரதமர் நரேந்திர மோடி நிறுவவுள்ளார். இந்த சோழர் கால மாதிரி செங்கோலின் வரலாறு தெரியுமா?
ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு பல தலைவர்கள் முன்னிலையில் இந்த செங்கோலைப் பெற்றுக் கொண்டுதான் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியா சுதந்திரம் பெற்றதை அறிவித்தார். இந்த சுதந்திரத்தை கொண்டாடும் வகையில் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த தமிழகத்தின் திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து செங்கோலை பெற்றுக் கொண்டார்.

ஆங்கிலேயர்களால் இந்தியர்களின் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்பட்ட தருணம் அது. நாம் சுதந்திரம் என்று கொண்டாடுவது உண்மையில் செங்கோலை ஏற்ற அந்தத் தருணத்தைத்தான் என உள்துறை அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். சோழர் கால மாதிரி செங்கோல் தயாரிக்கும் பணியை சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு செட்டி நகைக் கடை மேற்கொண்டது.
5 அடி உயரம் கொண்ட இந்த செங்கோலின் மேல் பகுதியில் நீதியின் அடையாளமாக நந்தி சிலை இருக்கும். ஜவஹர்லால் நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோலை உம்மிடி பங்காரு செட்டி தயாரித்தார். செங்கோலை தயாரிக்கும் வம்சாவளியை சேர்ந்த ஜிதேந்தர் உம்மிடி பிரபல டிவி சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அவர் கூறுகையில் செங்கோல் எங்கள் குடும்பத்தின் சொத்து. என்னுடைய தாத்தாவின் உழைப்பு இன்று எங்களுக்கு பெருமையை தேடிக் கொடுத்துள்ளது.

இந்த செங்கோலின் பெருமையை கேள்விப்பட்டு புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இது இருக்க வேண்டும் என பிரதமர் விரும்புகிறார். இது போன்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது எங்கள் குடும்பத்திற்கு மிகப் பெரிய பாக்கியம். இந்த செங்கோலின் அசல், அலகாபாத்தில் உள்ளது ஜவஹர்லால் நேரு அருங்காட்சியகத்தில் உள்ளது. அந்த அசல் அளவுகளை கணக்கிட்டு அது போன்ற மாதிரியை உருவாக்கியுள்ளோம் என்றார்.
அந்த செங்கோல் பிரிட்டிஷ் வைஸ்ராய் மவுண்ட்பேட்டன் பிரபுவிடம் இருந்தது. அது பின்னாளில் நேருவிடம் ஒப்படைக்கப்பட்டது. நீதிக்கு நந்தியும் செல்வ செழிப்பிற்கு லட்சுமியின் உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications