"போர் ஒன்னும் சினிமா இல்லை.. தலைமுறை கடந்தும் தூக்கம் கூட வராது!" விஷமிகளை வெளுத்த Ex ஜெனரல் நரவனே
டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் மோதலை நிறுத்திக்கொள்ளக் கோரிக்கை விடுத்த நிலையில், அதை இந்தியாவும் ஏற்றது. இருப்பினும், இந்த விவகாரத்தில் சில விஷமிகள் சில மோசமான கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாகவே இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தொடர்ந்து வந்தது. பாகிஸ்தான் தாக்குதலை ஆரம்பிக்க அதற்கு இந்தியா தக்கப் பதிலடியைக் கொடுத்தது. பாகிஸ்தான் ராணுவம் இதனால் மோதலை முடிவுக்குக் கொண்டு வரலாம் எனக் கோரிக்கை விடுத்தது. அதை இந்தியா ஏற்றதால் மோதல் முடிவுக்கு வந்தது.

விஷமிகள்
இந்தியா சார்பில் போர் நிறுத்த அறிவிப்பை வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார். ஆனால், சில விஷமிகள் போரின் இழப்புகளை உணராமல் மோசமான கருத்துகளை விக்ரம் மிஸ்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வன்மத்தைக் கக்கி வருகிறார்கள். இதற்கிடையே இதுபோல போர் என்றால் என்னவென்றே தெரியாமல் பேசிக் கொண்டிருப்பவர்களை முன்னாள் ராணுவத் தளபதி தளபதி மனோஜ் முகுந்த் நரவனே மிகக் கடுமையாக சாடியுள்ளார்.
ஜெனரல் நரவனே
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் இந்திய காஸ்ட் அக்கவுன்டன்ட்ஸ் நிறுவனத்தின் வைர விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ஜெனரல் நரவனே, "உண்மையில் ஒரு போர் வெடிக்கும்போது, மரணமும் அழிவும் ஏற்படுகிறது. போர் ஏற்படும் போது பொருளாதார இழப்பும் பெரிதாக இருக்கும். மறுகட்டமைப்பு செலவுகள், இழந்த உபகரணங்களின் செலவுகள் எனப் பெரிய செலவு இருக்கும்.
போர் என்பது விலையுயர்ந்த ஒன்று.. போர் வாரக் கணக்கில் அல்லது மாதக் கணக்கில் நீடித்தால் கற்பனை செய்யாத அளவுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும்.. போரின் முடிவில் நாம் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டியிருக்கும்.. அப்போது தான் சிறு சிறு இழப்புகள் சேர்ந்து எவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது நமக்குத் தெரிய வரும்.
இந்திய ராணுவம்
போரை நிறுத்துவது நல்லதா கெட்டதா என்று இங்குப் பலர் விவாதித்து வருகிறார்கள். நீங்கள் கடந்த காலங்களில் நடந்தவை மற்றும் புள்ளி விவரங்களை எடுத்துப் பார்த்தால் இழப்புகள் மிகப் பெரியளவில் அல்லது சமாளிக்க முடியாத அளவுக்கு மாறத் தொடங்குவதற்கு முன்பு போரை நிறுத்துவதே புத்திசாலித்தனமானது. பாகிஸ்தானின் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது மட்டுமின்றி, அங்குள்ள விமானத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்த முடியும் என்பதை இந்தியா காட்டியுள்ளோம். இதன் மூலம் மோசமான பொருளாதார இழப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்தோம். இதுவே அவர்களை மோதல் நிறுத்தத்திற்குத் தள்ளியுள்ளது.

போர் சாதாரணமானது இல்லை
போர் என்பது சாதாரணமானது இல்லை.. அதில் ஏகப்பட்ட உயிரிழப்புகள் ஏற்படும். குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழப்பார்கள்.. எல்லைப் பகுதிகளில் கண்மூடித்தனமாக நடத்தப்படும் ஷெல் தாக்குதல்களில் குழந்தைகள் கூட கொல்லப்படுவார்கள்.. அந்த இழப்புகளை உண்மையில் யாரும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மிகப் பெரியளவில் மக்கள் தாங்கள் தங்கியிருந்த இடங்களை விட்டு வெளியேற நேரிடும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடையே மன ரீதியான பாதிப்பையும் ஏற்படுத்தும்.
குறிப்பாக எல்லைப் பகுதிகளில் உள்ள குழந்தைகள், தினசரி ஷெல் தாக்குதலைக் கண்டவர்கள், ஒவ்வொரு இரவும் எங்குப் பாதுகாப்பு இருக்குமோ எனத் தெரியாமல் ஓடியவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் மன ரீதியாகப் பாதிக்கப்படுவார்கள். அந்த அதிர்ச்சி தலைமுறைகளாகத் தொடர்கிறது. PTSD எனப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு காரணமாக இவர்கள் பாதிக்கப்படுவார்கள். போரில் மிக மோசமான அழிவைப் பார்த்தவர்கள், போரில் ஈடுபட்டவர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் தூக்கத்தில் இருந்து பதறியடித்துக் கொண்டு எழுவார்கள். அவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் மனநலச் சிகிச்சையும் தேவைப்படும்.
சினிமா இல்லை
எனவே, நான் தெளிவாகச் சொல்கிறேன் போர் ஒன்றும் ரோமான்டிக்கான விஷயம் இல்லை. இது ஒரு பாலிவுட் சினிமா இல்லை.. இது மிகவும் தீவிரமான விஷயம். போர் அல்லது வன்முறை என்பது கடைசி ஆப்ஷனாக மட்டுமே இருக்க வேண்டும். இதன் காரணமாகவே நமது பிரதமர் இது போரின் சகாப்தம் அல்ல என்று கூறியிருந்தார். போர்கள் அறிவில்லாத மக்களால் நம் மீது திணிக்கப்படும்.. ஆனால் அதில் கொண்டாட எதுவுமே இல்லை.
பலரும் ஏன் நாம் முழு வீச்சில் போரை ஆரம்பிக்கவில்லை என்று கேட்கிறார்கள். ஒரு ராணுவ வீரராக, கட்டளையிடப்பட்டால், நான் முதல் ஆளாகப் போருக்குச் செல்வேன்.. ஆனால், அது எனது முதல் ஆப்ஷனாக இருக்காது. எனது முதல் தேர்வு எப்போதும் பேச்சுவார்த்தையாகவே இருக்கும். பேச்சுவார்த்தை மூலம் கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதும், மோதல் ஏற்படுவதைத் தடுப்பதும் தான் முக்கியம்.

பேச்சுவார்த்தை முக்கியம்
தேசிய பாதுகாப்பில் நாம் அனைவருக்கும் சமமான பங்கு இருக்கிறது.. நாம் எப்போதும் ஒரு பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண வேண்டும். இது இரு நாடுகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சினைக்கு மட்டும் இல்லை.. குடும்பத்திற்குள், மாநிலங்களுக்கு இடையே, பிராந்தியங்களுக்கு இடையே, சமூகங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளும் இதுவே தீர்வாக இருக்கும். வன்முறை என்பது தீர்வாகாது.. போரை அதிகம் பார்த்த நான் இதைச் சொல்கிறேன். புரிந்து கொள்ள முயலுங்கள்" என்றார்.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் புகலிடங்களை இந்திய ராணுவம் அழித்தது. இதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது இந்தியப் பாதுகாப்புப் படையின் மிகப் பெரிய வெற்றியாகவே கருதப்பட்டது.
அதேநேரம் இந்தியாவின் இந்த வெற்றியைப் பார்த்துப் பொறுக்காத பாகிஸ்தான், இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியது. காஷ்மீர் தொடங்கி பஞ்சாப் வரை எல்லையில் பல இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. முதல் சில நாட்கள் இந்தியா திரும்பத் தாக்கவில்லை. இந்தியாவை நோக்கி வரும் ட்ரோன்களை தடுக்க மட்டுமே செய்தது. ஆனால், பிறகு திருப்பி அடிக்க தொடங்கியது. இதை பாகிஸ்தான் துளியும் எதிர்பார்க்கவில்லை.
இதனால் பாதிப்புகள் மிக மோசமாகப் போகும் என அஞ்சிய பாகிஸ்தான், போர் நிறுத்தம் செய்யக் கோரிக்கை விடுத்தது. இந்தியாவும் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காகப் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது. அது புரியாமல் உளரும் விஷமிகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே பேச்சு இருக்கிறது.












Click it and Unblock the Notifications