கனடா வன்முறைக்கு பின்னால் அமித்ஷா! வாஷிங்டன் போஸ்ட் சொன்ன ஷாக் தகவல்
டெல்லி: கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி தலைவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, இந்தியா-கனடா உறவு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த பஞ்சாயத்துக்கு முக்கிய காரணமே அமித்ஷாவும், 'ரா' அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரும்தான் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்தியர்கள் அதிக அளவில் குடியேறி வசித்து வரும் நாடுகளில் கனடாவும் ஒன்று. ஆனால், இப்போது நடக்கும் சம்பவங்களை எல்லாம் பார்க்கும்போது, எதிர்க்காலத்தில் இந்தியர்கள் கனடாவில் குடியேறுவதும், கனடா நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு வருவதும் குறையும் அபாயம் ஏற்படுமோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.

இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளி நிஜ்ஜார் கொலைதான். இந்தியாவை சேர்ந்த இவர், 90களில் கனடாவுக்கு சென்றுவிட்டார். அங்கு சிறு சிறு வேலைகளை செய்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்த அவர், ஒரு கட்டத்தில் சீக்கிய மதம் சார்ந்த இயக்களுடன் இணைந்தார். இந்த இணைப்பு அவரை 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' எனும் அமைப்பை நோக்கி நகர்த்தியது. இந்த அமைப்பு இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்பாகும். காரணம், இது சீக்கியர்களுக்கான தனிநாடு கோரிக்கையை வலியுறுத்துகிறது. இந்த கோரிக்கை பிரிவினைவாதத்தை தூண்டுவதாகும்.
இப்படியாக இந்தியாவுக்கு எதிரான அமைப்பில் இணைந்து, அங்கிருந்து இந்தியாவில் ஆட்களை வைத்து நாச வேலைகளுக்கு நிஜ்ஜார் பிளான் செய்வதாக, இந்தியா குற்றம்சாட்டியிருந்தது. எனவே நிஜ்ஜாரை விசாரிக்கவும், அவரை இங்கு அழைத்து வரவும் இந்தியா முயற்சித்தது. இதற்கு கனடா ஒத்துழைக்கவில்லை. இப்படி பஞ்சாயத்து போய்க்கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
தங்கள் நாட்டின் குடிமகன் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டு கொல்லப்பட்டதை ஏற்றுக்கொள்ளாத கனடா, தீவிர விசாரணையை தொடங்கியது. விசாரணையில் இந்திய தூதரக அதிகாரிகளின் பெயர் அடிப்பட்டிருப்பதாக கனடா கூறியது. அத்துடன் நிற்காமல் இந்திய தூதரக அதிகாரி ஒருவரையும் கனடாவிலிருந்து வெளியேற்றியது.
இது இந்தியாவின் தன்மானத்தை பயங்கரமாக சீண்டியது. பதிலுக்கு கனடா நாட்டின் தூதரையும் இந்தியா வெளியேற்றியது. இப்படியாக இரு நாட்டுக்கு இடையில் இந்த கொலை பெரும் பிளவை ஏற்படுத்தியது. கடந்த ஓராண்டு காலத்தில் இந்த பிரச்னையெல்லாம் ஓரளவு தீர்ந்து, உறவில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. ஆனால், மீண்டும் இந்த பிரச்னையை கனடா தற்போது கிளறியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சிங்கப்பூரில், இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் கனடா நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில் பேசிய விஷயங்கள் குறித்து அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்டு செய்தி ஊடகம் சில விஷயங்களை தெரிவித்திருந்தது. அதாவது, குஜராத் சிறையில் இருக்கும் பிரபல மாஃபியா தலைவன் பிஷ்னோயின் ஆட்கள்தான், நிஜ்ஜார் கொலையில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று கனடா தகவல்களை பகிர்ந்திருந்தது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் பேசிய மற்றொரு விஷயம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கனடாவில் நடந்த வன்முறைக்கு இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவரும், ரா எனும் உளவு அமைப்பின் முக்கிய புள்ளி ஒருவரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.
இன்னும் விரிவாக சொல்வதெனில், அமித்ஷாவின் ஆதரவில்தான் கனடாவில் வன்முறைகள் நடந்திருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்திருக்கிறது. இது குறித்து இந்தியா தரப்பில் இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications