காங்கிரஸ் வாங்கிய கடனை தான் அடைத்து வருகிறோம்.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
டெல்லி: இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் வாங்கிய கடனையும் சேர்த்து அடைத்து வருகிறோம் என்று பேசினார். எரிபொருள், உரங்கள் மற்றும் உணவு மானியங்களுக்கு மன்மோகன் சிங் வாங்கிய கடனை அடைத்து வருகிறோம். இந்த நிதி ஆண்டில் ரூ.5,946 கோடி வட்டி மற்றும் அடுத்த நிதி ஆண்டில் ரூ.3,544 கோடி வட்டி பழைய கடனுக்காக செலவிட வேண்டியுள்ளது என்று நிர்மலா சீதாராமன் பேசினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. கடந்த 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன் 2025-26 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்தார். தற்போது பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற லோக்சபாவில் இன்று உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார்.

அப்போது அவர் காங்கிரஸ் வாங்கிய கடனையும் சேர்த்து வாங்கி வருகிறோம் என்று பேசியுள்ளார். இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:- எரிபொருள், உரங்கள் மற்றும் உணவு மானியங்களுக்கு மன்மோகன் சிங் வாங்கிய கடனை அடைத்து வருகிறோம். இந்த நிதி ஆண்டில் ரூ.5,946 கோடி வட்டி மற்றும் அடுத்த நிதி ஆண்டில் ரூ.3,544 கோடி வட்டி பழைய கடனுக்காக செலவிட வேண்டியுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய நிர்மலா சீதாராமன் கூறியதாது:- நிச்சயமற்ற ஒரு சூழலில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மக்கள் மீதும் பொருளாதாரத்தின் மீதும் அரசு முதலீடு செய்துள்ளது. உணவு பொருள் பணவீக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மூலதனச் செலவு ரூ.15.48 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதிப் பற்றாக்குறை 4.4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறையும் விவகாரத்தை பொறுத்தவரை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை நிர்ணயம் செய்வதில் பல்வேறு சர்வதேச மற்றும் உள்நாட்டு காரணிகள் உள்ளன. அக்டோபர் 2024 முதல் ஜனவரி 2025 வரை அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 3.3 சதவீதம் குறைந்துள்ளது.
ஆனால் பல ஆசிய நாடுகளை விட இந்த சரிவு குறைவுதான். தென் கொரியாவின் வான் மற்றும் இந்தோனேசியாவின் ரூபாயா முறையே 8.1 மற்றும் 6.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளன. யூரோ, பிரிட்டன் பவுண்ட் கூட வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 180 டிகிரி கோணத்திற்கு உலகளாவிய சூழல்கள் மாறியுள்ளன. இதனால், முன்னெப்போதும் இல்லாததை விட தற்போது பட்ஜெட் தயாரிப்பது சவாலாக உள்ளது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications