இந்தி புரியாது- டெல்லி போராட்டம் குறித்த குழுவில் மாஜி தலைமை நீதிபதி சதாசிவம் இல்லை- சுப்ரீம்கோர்ட்
டெல்லி: மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் தலைமை நீதிபதிகள் சதாசிவம் இடம்பெறமாட்டார் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் இந்த விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் தொடக்கம் முதலே மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், விவசாய சட்டங்களை அமல்படுத்துவதற்கு தடை விதிக்கக் கூடாது என்கிற கருத்தை பலமுறை வலியுறுத்தினார். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 15-ந் தேதி நடைபெற உள்ளதாகவும் கே.கே. வேணுகோபால் சுட்டிக்காட்டினார். ஆனால் தலைமை நீதிபதி போப்டே, விவசாயிகள் போராட்ட விவகாரத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் விதம் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

அவகாசம் கொடுத்துவிட்டோம்
மேலும் விவசாய சட்டங்களை நிறுத்தி வைப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு போதுமான அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தையில் என்ன நடைபெற்றது? என்கிற விவரங்கள் எதுவும் இல்லை. இப்போது மிக இக்கட்டான சூழ்நிலை உள்ளது.

உச்சநீதிமன்ற குழு
டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையில் குழு அமைக்க ஆலோசிக்கிறோம். மற்றொரு முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா பெயரும் பரிசீலனை செய்யப்படுகிறது.

வீட்டுக்கு அனுப்புங்க
அத்துடன் போராட்ட களத்தில் இருந்து முதியவர்கள், பெண்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு தடை விதிக்கப் போவது இல்லை. ஆனால் விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கவே விரும்புகிறோம். இவ்வழக்கில் இன்று உத்தரவின் ஒரு பகுதி பிறப்பிக்கப்படும்; நாளை விசாரணைக்குப் பின் அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி போப்டே கூறினார்.

இந்தி புரியாது-சதாசிவம் இல்லை
இருப்பினும் விவசாய சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைப்பதற்கு மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது, தாம் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவத்திடம் பேசினேன். அவரால் இந்தி புரிந்து கொள்ள முடியாது என கூறியதால் உச்சநீதிமன்றம் அமைக்கும் குழுவில் இடம்பெறமாட்டார் என்றார்.












Click it and Unblock the Notifications