கொரோனா அலையல்ல...இது சுனாமி... இதை எதிர்கொள்ள தயாராக வேண்டும் - மத்திய அரசு
இனி வரும் நாட்களில் கொரோனா பரவல் மிக மோசமாக இருக்கும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
டெல்லி: கொரோனாவின் கோரதாண்டவம் இனி வரும் நாட்களில் மிக மோசமாக இருக்கும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்துள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து மாநில அரசுகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
டெல்லியில் நிலவும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது தொடர்பாக தனியார் நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்கு விசாரணையின் போது, அடுத்த சில வாரங்களுக்கு பாதிப்பு மிக மிக மோசமாக இருக்கும். இது அச்சப்படுத்துவதற்காக இல்லை. நிலைமை மோசமாக உள்ளது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் சிலிண்டர்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. தினசரியும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமான நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இதைச் சமாளிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை டெல்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. நீதிபதிகள் விபின் சாங்வி, ரேகா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்களை விசாரித்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், டெல்லியில் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், உண்மை நிலவரத்தை எப்படி மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது? ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது. பிரச்சினையைப் புரிந்துகொண்டு உணர்வுபூர்வமாக அணுகுங்கள்.
மருத்துவமனைகளில் தேவை அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. இந்த வேளையில் தொழிற்சாலைகளில் இருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மருத்துவத் தேவைக்குத் திருப்பிவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. மக்கள் உயிரைவிடப் பொருளாதார நலன் முக்கியமானது அல்ல. மத்திய அரசுக்கு மக்கள் உயிர் மீது அக்கறையில்லையா? என கேள்வி எழுப்பினர்.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ஆக்சிஜன் தட்டுப்பாட்டைச் சமாளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்குத் தெரிவித்துள்ளதாகவும் விளக்கினார்.
அதற்கு நீதிபதிகள், ஒருசில மருத்துவமனைகள்தான் ஆக்சிஜன் தட்டுப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தை அணுகியுள்ளன. ஆனால், ஆக்சிஜன் தேவை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாகத் தட்டுப்பாட்டைச் சமாளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று தெரிவித்தனர்.
இப்படி ஓர் இக்கட்டான நேரத்தில் வேறெங்கெல்லாம் ஆக்சிஜன் இருக்கிறதோ அங்கெல்லாம் பிச்சை எடுங்கள், கடனாகக் கேளுங்கள், இல்லை திருடுங்கள் என்று காட்டமாகத் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல், நமது நாட்டின் அன்றாட ஆக்சிஜன் உற்பத்தித் திறன் 7,200 மெட்ரிக் டன். பல்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் ஆக்சிஜனைக் கொண்டுவர கால அவகாசம் வேண்டும் என்றார். பொறுப்பைத் தட்டிக் கழிப்பதால் மக்களின் உயிர்தான் பறிபோகும் என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்து வழக்கை தள்ளி வைத்தனர்.
இதனிடையே கடந்த இரு தினங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால் டெல்லி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 50க்கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இது மக்களை அச்சுறுத்துவதற்காக தெரிவிக்கப்படவில்லை இதுதான் நிதர்சனமான உண்மை என்று கூறியுள்ளது.
இன்று ஆஜரான ராகுல் மெக்ரா, கொரோனா அதிகரித்துள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், ஆக்சிஜன் தட்டுப்பாட்டை கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொரோனாவை எதிர்கொள்ள அனைத்து மாநில அரசுகளும் மக்களும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 480 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தற்போது டெல்லி மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
கொரோனா இரண்டாவது அலை என்று அனைவரும் கூறி வரும் நிலையில் நிலைமையின் தீவிரத்தைப் பார்த்தால் கொரோனா சுனாமி போல தெரிவதாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் அச்சம் தெரிவித்தனர். தனியார் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கொரோனாவால் அனைத்து மாநிலங்களும் திணறிக் கொண்டிருக்கும் சூழலில் கொரோனாவின் தீவிரம் இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications