திகார் சிறைக்கு வரவேற்கிறேன்.. விரைவில் அப்ரூவராவேன்! கெஜ்ரிவாலுக்கு சுகேஷ் மிரட்டல் மெசேஜ்
டெல்லி: திகார் சிறைக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை வரவேற்பதாக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மேலும் கெஜ்ரிவாலுக்கு எதிராக அப்ரூவர் ஆவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை கேட்டதை அடுத்து நீதிமன்றமும் அனுமதி அளித்தது.

அமலாக்கத் துறை காவல் முடிந்த நிலையிலும் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை என்றால் டெல்லி திகார் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில்தான் திகார் சிறைக்கு வரவேற்கிறேன் என சுகேஷ் சந்திரசேகர், கெஜ்ரிவாலுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து சுகேஷ் சந்திரசேகர் கூறுகையில் உண்மை வென்றுள்ளது. திகார் சிறைக்கு அவரை நான் வரவேற்கிறேன்.
கெஜ்ரிவால் பற்றிய செய்திகளை வெளிப்படுத்துவேன். நான் அரசு தரப்பு அப்ரூவராவேன். அவரை விசாரணைக்கு கொண்டு வருவதை உறுதி செய்வேன். அனைத்து ஆதாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுகேஷ் தெரிவித்துள்ளார்.
அது போல் டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு சுகேஷ் ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில் "போலி வழக்குகள் என்ற நாடகம் மற்றும் குற்றச்சாட்டு பொய்த்துவிட்டன. உண்மை வென்றுள்ளது. உங்களுடைய கர்மா மீண்டும் உங்களுக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். முதல்வர் கெஜ்ரிவாலை பாதுகாத்து எந்த பலனும் இல்லை என்றும் கவிதாவுக்கு சுகேஷ் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைதான பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர். இவர் ரூ 200 கோடி பணமோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மருந்து உரிமையாளரின் மனைவி அதிதி சிங்கிடம் இருந்து அவரது கணவரை சிறையிலிருந்து வெளியே எடுப்பேன் என கூறி சுகேஷ் ரூ 200 கோடியை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிறையில் இருந்த படியே சுகேஷ் இந்த வேலையை செய்துள்ளார். இதற்கு உடந்தையாக அவருடைய மனைவி நடிகை மரியா பால் இருந்துள்ளார். இதையடுத்து அவரும் டெல்லி போலீஸாரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். சுகேஷ் எழுதிய கடிதம் மார்ச் 19ஆம் தேதி கிடைத்துள்ளது. புதிய மதுபான கொள்கையின் பலன்களை பெற ஆம் ஆத்மி தலைவர்களுக்கு ரூ 100 கோடியை கவிதா தந்ததாகவும் அமலாக்கத் துறை குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து ஆயிரம் கோடிக்கணக்கான பணத்தை பெற்று கவிதா, அதை சிங்கப்பூர், ஹாங்காங், ஜெர்மனி ஆகிய இடங்களில் பதுக்கி வைத்துள்ளார் என்றும் சுகேஷ் தெரிவித்திருந்தார். தெலுங்கானாவில் உள்ள பிஆர்எஸ் கட்சி அலுவலகத்திற்கு கெஜ்ரிவால் ரூ 15 கோடி பணம் செலுத்தியதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்றும் சுகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications