Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆம்ஆத்மி தான் வளருமா? களமிறங்கிய மம்தா.. 2023 துவக்கத்தில் 3 மாநிலத்துக்கு குறி.. பாஜகவுக்கு ‛செக்’

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அரவிந்த கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் குஜராத்திலும் கால்பதித்துள்ளது. இந்நிலையில் தான் மேற்கு வங்க முதல்வரான மம்தா பானர்ஜியும் தனது போக்கசை திருப்பி 2023 துவக்கத்தில் நடக்கும் 3 மாநில தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்தில் பாஜகவுக்கு ‛செக்' வைக்கும் முனைப்பில் வியூகம் வகுத்து வருகிறார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் மொத்தம் 7 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடந்தது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் என 5 மாநில தேர்தல் நடந்தது. அதன்பிறகு தற்போது இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடந்தது.

அடுத்த ஆண்டு 9 தேர்தல்கள்

அடுத்த ஆண்டு 9 தேர்தல்கள்

இந்த 7 மாநில தேர்தல்களில் பஞ்சாப்பில் ஆம்ஆத்மியும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடித்தது. பிற 5 மாநிலங்களில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு மொத்தம் 9 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வடகிழக்கு மாநிலங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளன. அதன்படி மேகாலயா, நாகலாந்து, திரிபுரா, மிசோராம், கர்நாடகா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது.

3 மாநிலங்களுக்கு ஒன்றாக தேர்தல்?

3 மாநிலங்களுக்கு ஒன்றாக தேர்தல்?

இதில் மேகாலயா, நாகலாந்து, திரிபுரா உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ஒன்றாக தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் தலா 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலங்களில் ஆட்சியமைக்க ஒரு கட்சி 31 இடங்களில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். தற்போது மேகலயாவில் பாஜக அங்கம் வகிக்கும் மேகாலயா ஜனநாயக கட்சிகள் எனும் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கான்ராட் சங்மா முதலமைச்சராக உள்ளார். இந்த கூட்டணிக்கு மொத்தம் 44 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதிகபட்சமாக என்பிபி கட்சிக்கு 21 எம்எல்ஏக்கள் உள்ளன. பாஜகவுக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளன. எதிர்க்கட்சியாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

மேகாலயா சென்ற மம்தா

மேகாலயா சென்ற மம்தா

இந்நிலையில் தான் மம்தா பானர்ஜி மேகாலயா பக்கம் கவனத்தை திருப்பி உள்ளார். அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக மம்தா பானர்ஜி மேகாலயா தலைநகர் ஷில்லாங் சென்றுள்ளார். நேற்று மருமகன் அபிஷேக் பானர்ஜியுடன் மம்தா பானர்ஜி அங்கு சென்றார். உம்ரோய் விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 முன்னாள் முதல்வருடன் ஆலோசனை

முன்னாள் முதல்வருடன் ஆலோசனை

மேகாலயாவில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆட்சியை பிடிப்பது பற்றி ஆலோசனை வழங்க உள்ளதோடு, பொதுக்கூட்டத்திலும் பேச முடிவு செய்துள்ளார். மேகாலயாவில் முக்கிய எதிர்க்கட்சியாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. தற்போது ஆளும் மேகாலயா ஜனநாயக கட்சியின் கூட்டணியை தோற்கடித்து வரும் தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் மம்தா பானர்ஜி அங்கு சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வராக இருந்த முகுல் சங்மா சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பலமாக கருதப்படுகிறது. அவருடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தினார்.

கூட்டணி வியூகம்

கூட்டணி வியூகம்

மேலும் வரும் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதனால் தற்போதைய கூட்டணியில் உள்ள கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து மேகாலயாவில் ஆட்சியை பிடிக்க மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அவரது இந்த பயணம் கவனிக்கும் வகையில் உள்ளது.

திரிபுரா நிலவரம் என்ன?

திரிபுரா நிலவரம் என்ன?

அடுத்ததாக மம்தா பானர்ஜி நாகலாந்து, திரிபுராவில் கவனம் செலுத்த உள்ளார். திரிபுராவில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் 25.80 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இந்த தேர்தலி்ல பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 24 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியடைந்தது. இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இங்கு கவனம் செலுத்தி வருகிறது.

நாகலாந்து நிலவரம் என்ன?

நாகலாந்து நிலவரம் என்ன?

அதேபோல் நாகலாந்தில் என்பிஎப் கட்சியின் தலைமையில் பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த தேர்தலில் 11.76 லட்சம் வாக்காளர்கள் இருந்தனர். இங்கு என்பிஎப் கட்சிக்கு 26 எம்எல்ஏக்கள், பாஜகவுக்கு 12 எம்எல்ஏக்கள் உள்ளன. நைபியு ரியோ முதலமைச்சராக உள்ளார். வரும் தேர்தலில் இங்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த உள்ளது. இங்கு பல சிறிய கட்சிகள் தனித்தனியே தேர்தலில் நிற்கின்றனர். இந்த கட்சிகளை இணைத்து திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்படுகிறது. மேகலயா, திரிபுரா, நாகலாந்து, இந்த 3 மாநிலங்கள் அளவில் மிகவும் சிறியவை. இதனால் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி நல்ல உள்ளூர் தலைவர்களை அடையாளம் கண்டுவிட்டால் அல்லது உள்ளூர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் எளிமையாக வெற்றி பெறலாம் என்ற முனைப்பில் மம்தா பானர்ஜி தீவிரமாக களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

கெஜ்ரிவாலை போல் கவனம்

கெஜ்ரிவாலை போல் கவனம்

மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி குறுகிய காலத்திலேயே டெல்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் குஜராத் மாநிலத்திலும் நுழைந்துள்ளது. இதனால் அவரது கட்சி தேசிய அந்தஸ்தை பெறும் நிலையில் பாஜக, காங்கிரஸ் கட்சியை போல் ஆம்ஆத்மியும் தேசிய அளவில் வளரலாம் என கூறப்படுகிறது. இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை பிற மாநிலங்களில் மலர செய்யும் முனைப்பில் மம்தா பானர்ஜி உள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளார். இதன்மூலம் பிற மாநில தேர்தல்களில் சாதித்தால் அது நிச்சயம் அவரது இமேஜை உயர்த்தும் என்பதால் தற்போது மம்தா பானர்ஜி மிகவும் ஆர்வமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+